கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே அரிவாளால் தாக்க முயன்ற தோட்டக் காவலாளியை வனத் துறை அதிகாரி சுட்டுக் கொன்றார்.
கூடலூர் அருகேயுள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (55). தோட்டக் காவலாளியான இவருக்கு, மனைவி உமா, மகன் திருநாவுக்கரசு, மகள் லினோ உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரன் விண்ணேற்றிப் பாறை அடர் வனப் பகுதிக்குள் வேட்டையாட முயன்றதாகவும், அப்போது ரோந்து வந்த வனத் துறையினருடன் ஏற்பட்ட தகராறில், வனத் துறை அதிகாரி அவரை சுட்டுக் கொன்றதாகவும் நேற்று அதிகாலை அவரது உறவினர்களுக்குத் தகவல் கிடைத்தது.
தகவலறிந்த காவல் மற்றும் வனத் துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இறந்த ஈஸ்வரனின் உடலை மீட்டு, நேற்று முன்தினம் இரவே தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உறவினர்கள் சாலை மறியல்: ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்த அவரது உறவினர்கள், நேற்று காலை கம்பம் அரசு மருத்துவ மனைக்கு வந்தனர். அங்கு ஈஸ்வரன் உடல் இல்லாததாலும், தேனிக்கு உடல் கொண்டு செல்லப்பட்ட தகவலைத் தெரிவிக்காததாலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கூடுதல் கண்காணிப்பாளர் மதுக் குமாரி தலைமையில், உத்தமபாளையம் துணைக் கண்காணிப்பாளர் சக்திவேல், கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் லாவண்யா மற்றும் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து ஈஸ்வரனின் உறவினர்கள் கூறும்போது, “வயலுக்கு தண்ணீர்ப் பாய்ச்சுதல் மற்றும் காவல் காக்கும் தொழிலாளியாகத் தான் அவர் வேலை செய்து வந்தார். வேட்டையாடச் சென்றார் என்பதை நம்ப முடியவில்லை. இரவு 9 மணிக்கு நடந்ததை, காலையில் தான் வனத்துறையினர் தெரிவித்தனர். எனவே, உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும்” என்றனர்.
வன விலங்கு வேட்டை?: வனத்துறையினர் கூறும்போது, “வனப் பகுதியில் மின்வேலி அமைத்து, வன விலங்குகளை வேட்டையாடுவதாக தகவல் கிடைத்தது. வனவர் திருமுருகன் தலைமையிலான 6 பேர், இரண்டு குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனர். முடநாரி புதுப்பாலம் அருகே விலங்குகளை வேட்டையாட மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அருகில் இருந்த ஈஸ்வரனிடம் விசாரித்த போது, அவர் அரிவாளால் தாக்க முயன்றார். இதனால் வனவர் திருமுருகன், துப்பாக்கியால் ஈஸ்வரனை சுட்டார்” என்றனர்.


கக்கூஸ் போன 55 வயது ஈஸ்வரனை சுட்டு கொலை செய்துவிட்டு கதை விடுகின்றனர் வனத்துறையினர் வனத்துறையினர் ஆறு பேர் இருந்துள்ளனர் அதை அவர்களே ஒப்பும் கொண்டுள்ளனர் ஆறு பேர் சேர்ந்து ஒரு 55 வயதான ஈஸ்வரனை அடித்து பிடித்து மடக்கி பிடிக்க இயலாதா கையில் துப்பாக்கி வைத்துள்ளனர் வனத்துறையினர் அப்படி இருக்கையில் துப்பாக்கியால் வானத்தைச் நோக்கி சுட்டு எச்சரிக்கை செய்திருக்கலாம் அல்லது கை கால்களில் சுட்டு பிடித்திருக்கலாம் அதையெல்லாம் விட்டுவிட்டு ஏழை தானே என்கிற இளக்காரத்தில் அதிகாரி என்ற ஆணவத்திலும் சுட்டு கொலை செய்துள்ளனர் இது மிகவும் மன்னிக்க முடியாத கண்டிக்க வேண்டிய செயல் பாதிக்கப்பட்ட ஈஸ்வரன் குடும்பத்தினர் இந்த சம்பவத்தை வழக்காக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் காவல்துறையினர் ஏதேனும் நடவடிக்கை எடுக்கிறார்களா என்றும் பார்க்கலாம் ஆனால் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு சுத்தமாக கிடையாது எனவே எடுத்தாலும் சரி எடுக்க விட்டாலும் சரி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்காக பதிவு செய்யுங்கள் இதற்கு ஒரு நல்ல பத்திரிகையாளரின் உதவியை நாடுங்கள் அதை விட்டுவிட்டு எனக்கு அவனைத் தெரியும் இவனை தெரியும் என்று திமிராக வழக்கு பதிவு செய்கிறேன் என்றால் அது விளங்காது