தமிழக கல்லூரிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்கள் குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் அரசாணை தொடர்பாக விளக்கமளிக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்திருக்கிறார். அதோடு, உயர்கல்வித்துறை ஆணை தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கைக்கும் திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் திருமாவளவன், “கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. அது முடிவுறும் தறுவாயில் பா.ம.க நிறுவனர் வெளியிட்டிருக்கும் அறிக்கை, உயர்கல்வித்துறை மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு எதிராக உள்நோக்கம் கற்பிப்பதாக அமைந்திருக்கிறது. அத்துடன், மாணவர்களிடையே சாதி அடிப்படையிலான இடைவெளியை உருவாக்குவதாகவும் இருக்கிறது. அவரது அறிக்கை உண்மையைத் திரித்துக் கூறுவதாக இருக்கிறது.
அதாவது, `உயர்கல்வித்துறையின் அரசாணை எண் 161-ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், அந்த இடங்கள் முதலில் இஸ்லாமியர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். அதன் பின்னரும் காலியிடங்கள் இருந்தால், அவை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும், போதிய எண்ணிக்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இல்லாத சூழலில் மட்டும்தான் அந்த இடங்கள் பட்டியலினம், பழங்குடியினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும்’ என பா.ம.க நிறுவனர் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார். ஆனால், அந்த அரசாணையில் அவ்வாறு எதுவும் கூறப்படவில்லை என்பதே உண்மையாகும்.
அந்த அரசாணையின் பத்தி எண்- 33 இல், `நிரப்பப்படாத BC-க்கான காலியிடங்களை மற்ற சமூகத்தினரைக் கொண்டு நிரப்பலாம் (Unfilled BC vacancies can be filled by other communities)’ என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அதைத் தம் விருப்பம்போல அவர் திரித்துக் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. அத்துடன், அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், இவ்வாறு தவறானதொரு கருத்தை உள்நோக்கத்துடன் திட்டமிட்டுப் பரப்புவது கல்லூரி முதல்வர்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (MBC) சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியில் உரிய வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இல்லாத ஒன்றைச் சொல்லி அரசாணைக்கு எதிராகக் கல்லூரி முதல்வர்களும் உயர்கல்வித்துறையும் செயல்படுவதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்குவது ஏன்… அதாவது, அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்களும் உயர்கல்வித்துறையும் தமிழக அரசும் பட்டியல் சமூகத்துக்கு ஆதரவாகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு எதிராகவும் செயல்படுவதைப்போல ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்க முயல்வது ஏன்?
2019 – 20 காலகட்டத்தில் தமிழகத்தில் கல்லூரிப் படிப்பில் சேரும் பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மாணவர்களின் எண்ணிக்கைக்கும் (GER) பொது மாணவர்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், அரசுக் கல்லூரியில் சேரும் அந்த மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்வகையில், அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை உள்நோக்கம் கொண்ட சாதி அரசியலாகத் தெரிகிறது. பா.ம.க-வின் இந்த சாதியவாத சூது அரசியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. இந்த நிலையில், கல்லூரி முதல்வர்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும், தற்போது நடைமுறையிலுள்ள அரசாணை எண்-161 குறித்துத் தெளிவை உருவாக்கிட தமிழக அரசு உடனடியாக உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.


