ரயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட ஏசி இருக்கை வகுப்புகளில் பயணிப்பதற்கான கட்டணம் 25 சதவிகிதம் வரை குறைக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
ஏசி இருக்கை வசதி கொண்ட ரயில்களில், பயணிகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணக் குறைப்பு சலுகையை அறிவிக்க ரயில்வே மண்டலங்களுக்கு அதிகாரம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 25 சதவிகிதம் வரை ஒரு ரயிலில் கட்டணச் சலுகை அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணக் குறைப்பு நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், ஆனால், ஏற்கனவே முன்பதிவு செய்திருக்கும் ரயில் டிக்கெட்டுகளுக்கான கட்டணம் திரும்ப வழங்கப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை வசதிக்கான கட்டணம் 25 சதவிகிதம் வரை குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறவிப்பினை வெளியிட்டுள்ளது.
பயணிகளின் பயன்பாடு 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் ஏசி இருக்கை வசதி கொண்ட ரயில்களின் கட்டணம் 25 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 30 நாள்களில், 50 சதவிகிதத்துக்கும் குறைவான பயன்பாடு இருக்கும் ரயில்களுக்கு இந்த கட்டணக் குறைப்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏசி சேர் கார், எக்ஸிக்யூட்டிவ் வகுப்புக் கட்டணங்கள் குறையும் என்று கூறப்படுகிறது.
ஒரு ரயில் புறப்படும் சந்திப்பின் மண்டல ரயில்வே உயர் அதிகாரி, கட்டணக் குறைப்பு குறித்து முடிவெடுக்கலாம் என்றும், அதனை அதிகபட்சம் 6 மாதங்கள் வரை தொடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு என்பதை முழு மாதமும், வார நாள்களில் அல்லது வார இறுதி நாள்களில் என பயன்பாட்டின் தேவைக்கு ஏற்படவும் அறிமுகப்படுத்திக்கொள்ளலாம்.
கட்டணச் சலுகை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், நடைமுறைகளுக்கு ஏற்ப சலுகையை மாற்றியமைத்துக் கொள்ளலாம், எந்த மாற்றமும் உடனுக்குடன் செயல்படுத்தப்படும், அதே வேளையில், முன்பதிவு செய்தவர்களுக்கு இந்தச் சலுகைப் பொருந்தாது, பணம் திரும்ப வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் பயன்பாடு அதிகரித்த பிறகு, சலுகைக் கட்டணத்தை நிறுத்தியும் வைக்கலாம் என்றும் இந்திய ரயில்வே மண்டலங்களுக்கு தெரிவித்துள்ளது.

