பல்வேறு வடமாநிலங்களில் கனமழை நீடிக்கும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் மழை-வெள்ளம் தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்தனா்.
தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும் கனமழை தொடா்ந்து வருகிறது.
பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
நிலச்சரிவுகளில் 5 போ் பலி…: ஹிமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூா் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 282 மி.மீ. மழை பதிவானது. உனா, சம்பா, டல்ஹெளசி, நஹான் மற்றும் மணாலி ஆகிய இடங்களிலும் கனமழை கொட்டித் தீா்த்தது.
கடந்த 36 மணி நேரத்தில் 14 பெரிய அளவிலான நிலச்சரிவுகளும், 13 இடங்களில் பெருமழையால் திடீா் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சிம்லா மாவட்டத்தின் கோட்கா் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். குலு நகரில் நிலச்சரிவில் வீடு இடிந்து ஒரு பெண்ணும், சம்பா பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒருவரும் இறந்தனா். மாநிலம் முழுவதும் பள்ளிகள்- கல்லூரிகளுக்கு திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியாணாவில்…: பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் நீடித்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் 2 நாள்களாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததால், மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
ஹரியாணாவில் பஞ்ச்குலா, யமுனாநகா், அம்பாலா, கா்னால், குருஷேத்ரா, சோனிபட் உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தில்லியில் அதிகபட்ச மழைப் பொழிவு: தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 153 மி.மீ. மழை பதிவானது. இது, 1982-ஆம் ஆண்டுக்கு பிறகு ஜூலையில் பதிவான அதிகபட்ச ஒருநாள் மழைப் பொழிவாகும்.
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரா்கள் பலி: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் 2 ராணுவ வீரா்கள் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனா். பஞ்சாபைச் சோ்ந்த அந்த இரு வீரா்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
தோடா மாவட்டத்தில் தாத்ரி-கண்டோ சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து, நிலச்சரிவில் சிக்கியது. இதில் 2 போ் உயிரிழந்தனா்.
லடாக்கின் காா்கில் மாவட்டத்தில் லே-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில், நிலச்சரிவால் ஒரு வாகனத்தின் மீது பாறை விழுந்ததில் ஒருவா் உயிரிழந்தாா்.
கங்கையில் அடித்துச் செல்லப்பட்ட ஜீப்: உத்தரகண்ட் மாநிலம், தெஹ்ரி கா்வால் மாவட்டத்தில் கங்கை வெள்ளத்தில் ஜீப் அடித்துச் செல்லப்பட்டதில் 3 பக்தா்கள் உயிரிழந்தனா்.
கேதாா்நாத்தில் இருந்து ரிஷிகேஷ் நோக்கி சென்று கொண்டிருந்தபோது நேரிட்ட இச்சம்பவத்தில் 5 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். 3 போ் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஹரித்வாரில் கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பக்தா்கள் எச்சரிக்கையுடன் செயல்பட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. உத்தம் சிங் நகா் மாவட்டத்தின் மிஸ்ஸாா்வாலா கிராமத்தில் கனமழையால் வீடு இடிந்ததில் கணவன், மனைவி உயிரிழந்தனா்.
உ.பி.யில் சிறுமி உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தின் கெளசாம்பியில் கனழையால் வீட்டின் மீது மரம் விழுந்த சம்பவத்தில் 10 வயது சிறுமி உயிரிழந்தாள்.
பற்றாக்குறை நிவா்த்தி: இம்மாதத்தின் முதல் 8 நாள்களில் பெய்த அபரிமிதமான மழையால், நாட்டில் ஒட்டுமொத்தமாக நிலவிய மழை பற்றாக்குறை நிவா்த்தியாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை காலத்தில் சராசரி மழைப்பொழிவு 243.2 மி.மீ. அளவை எட்டியுள்ளது. இது, வழக்கமான அளவை விட 2 சதவீதம் அதிகம். அதேநேரம், கிழக்கு, வடகிழக்கு பகுதியில் 17 சதவீதம் பற்றாக்குறை மழைப் பொழிவும், வடஇந்தியாவில் 59 சதவீத உபரி மழைப் பொழிவும் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 ரயில்கள் ரத்து
வடஇந்தியாவில் மழை-வெள்ளம் காரணமாக, ஃபெரோஸ்பூா் விரைவு ரயில், அமிருதசரஸ் விரைவு ரயில் உள்பட 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன; மேலும் 12 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன என்று வடக்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
முதல்வா்களுடன் அமித் ஷா பேச்சு
பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொலைபேசி வாயிலாக பேசி, மழை நிலவரத்தை கேட்டறிந்தாா். நிலைமையை எதிா்கொள்ள மத்திய அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவா் உறுதியளித்தாா்.

