தென்காசி: சங்கரன் கோவிலில் ஆடித்தபசு திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுக்க கோமதி அம்மன் நகர் வலம் வந்த காட்சி காண்பவர்களை பரவசப்படுத்தியது. தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி ஆலயம் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில், தவ மிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அரியும் சிவனும் ஒன்றென உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன் கோவில்.
தனது ஒருபாகத்தை உடன் பிறந்தவருக்கு விட்டுக்கொடுத்து பிறந்த வீட்டுப் பெருமையையும், புகுந்த வீட்டு தியாகத்தையும் நிலைநிறுத்தியவள் அன்னை பார்வதி. ‘அரியும், சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில், சங்கரன் கோமதியம்மனுக்கு சங்கர நாராயணராக காட்சி தந்த ஆடித்தபசு விழா வரும் திங்கட்கிழமையன்று நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. ஆடித் தபசு கொடியேறிய பின் ‘ஆடிச்சுற்று’ என்ற பெயரில், பக்தர்கள் கோயிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள். ஆடிச்சுற்று சுற்றுவதால், ஒரு காலில் நின்று தபசு காட்சி காணும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
ஆடித்தபசு திருவிழாவின் 9ஆம் நாளான இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. கோமதி அம்பாள் காலை 5.40 மணிக்கு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. காலை 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர். தேரோட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் பங்கேற்றார்.
ஏராளமான அரசியல் கட்சியினரும் தேரோட்டத்தில் பங்கேற்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு நகராட்சி சார்பில் ரதவீதிகள் சுத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து தண்ணீர் தெளிக்கப்பட்டது இருந்தது. ஏழரை சனி, அஷ்டம சனி.. தலையில் குட்டும் சனிபகவான்..என்ன செய்யலாம்..என்ன செய்யக்கூடாது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெறுகிறது. அம்பாளின் தபசுக் காட்சியின்போது பக்தர்கள் பருத்தி, மிளகாய் வத்தலையும், விவசாயிகள் நெல், சோளம், கம்பு, மிளகாய்வத்தல், பஞ்சு, பூ என வயலில் விளைந்த பொருட்களை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள்மீது வீசியெறிந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.
செய்தி முத்துராஜ்

