ஆனால், மேக்கேதாட்டூவில் அணை கட்டியே தீருவது என்ற தீவிரமான முயற்சியை டி.கே.சிவக்குமார் மேற்கொள்வார் என்றே தெரிகிறது. அப்படியான சூழலில், தி.மு.க., காங்கிரஸ் உறவில் சங்கடம் ஏற்படக்கூடிய நிலை உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, டி.கே.சிவக்குமாரின் பேச்சில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
“தமிழ்நாடுமீது எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. தமிழ்நாட்டுக்கு எதிராக நாங்கள் சண்டையிடவும் இல்லை. தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் எங்கள் சகோதரர்கள். அதுபோல, இங்கே வசிப்பவர்கள் அவர்களின் சகோதரர்கள். எனவே, வெறுப்புக்கோ, பொறாமைக்கோ வாய்ப்பு இல்லை. இது எங்களுடைய திட்டம். இது, அவர்களுக்கும் பலனளிக்கும். காவிரி படுகையில் இருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் நாம் உதவ வேண்டும்” என இன்று டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.
மேலும், “கர்நாடகா எவ்வளவு தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்பது தொடர்பான உத்தரவுகள் இருக்கின்றன. நாங்கள் தண்ணீரைத் தேக்கிவைத்து, அதை பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்காக விநியோகிக்கப்போகிறோம். இதற்கு காவிரி தீர்ப்பாயத்தின் அனுமதி இருக்கிறது. எனவே, இது குறித்து பீதியடையத் தேவையில்லை. உங்களுக்கு (தமிழ்நாடு அரசு) நாங்கள் பிரச்னை கொடுக்க மாட்டோம். தாராள மனதுடன் இருங்கள். நாங்களும் தாராள மனதுடன் இருக்கிறோம். நாம் இருவரும் அண்டை மாநிலங்கள். நாம் சண்டையிட்டது போதும். அது ஒருபோதும் உதவுவதில்லை. நாம் நல்லிணக்கத்துடன் இருப்போம். அது குடிநீர் வழங்கவும், உங்கள் விவசாயிகளுக்கு நன்மை பெறவும் உதவியாக இருக்கும்” என்றும் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.

