Chennai oi-Arsath Kan
Published: Monday, July 10, 2023, 11:40 [IST]
சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடி பிரியாணி கடை திறக்கப்பட்ட முதல் நாளே மாவட்ட ஆட்சியர் சீல் வைத்ததற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பிரியாணி அல்லது பிரியாணி கடை நடத்துபவரின் மீதான வெறுப்பால், கோபத்தால் ஆட்சியர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டாரா என்கிற கேள்வி எழுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி தெரிவித்துள்ளது. பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி விடுத்துள்ள அறிக்கை வருமாறு; ”வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை ஒன்று திறப்பு விழாவை முன்னிட்டு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் பிரியாணியை வாங்க குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர், மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தராமல் விற்றதாக கூறி கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் கடைக்குள் இருந்த வாடிக்கையாளர்களை காவல்துறையினரை வைத்து வெளியேற்றியுள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அந்த நிறுவனம் மக்களை கவர சலுகைகளை அளிப்பது என்பது வாடிக்கையானது. அந்த சலுகைகள் தங்களுக்கு பிடித்திருந்தால் மக்கள் அதனை நாடி பெற்றுச்செல்வார்கள். அந்த வகையில் தான் காட்பாடியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை சலுகை அறிவிப்பை வெளியிட்டது. நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துவருகின்றன. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரபலங்களை அழைத்து திறப்பு விழாவை நடத்துகின்றன. அப்போது பிரபலங்களின் ரசிகர்கள் குவிந்து இதைவிட பல மடங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. இப்படி இருக்கும் சூழலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பிரியாணி கடைமுன் கூடியதற்காக மாவட்ட ஆட்சியர் பிரியாணி கடையை சீல் வைத்த நடவடிக்கை என்பது ஏற்புடையதல்ல. பிரியாணி அல்லது பிரியாணி கடை நடத்துபவரின் மீதான வெறுப்பால், கோபத்தால் ஆட்சியர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டாரா என்கிற கேள்வி எழுகிறது. விதிகளை மீறினால் வழக்கு தொடரலாம் அதைவிடுத்து வாடிக்கையாளர்களை காவல்துறையினரை வைத்து விரட்டியடித்து கடைக்கு சீல் வைப்பது சரியான நடைமுறையல்ல. இந்த நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணி வன்மையாக கண்டிப்பதோடு பிரியாணி கடைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Sdpi said that the District Collector has sealed the Katpadi near Biryani shop in Vellore district on the first day of its opening. The party has condemned.
Story first published: Monday, July 10, 2023, 11:40 [IST]

