சென்னை: பழம்பெரும் நடிகர் மறைந்த டணால் தங்கவேலுவிடம் 2 விஷயங்கள் வியப்பை தருகின்றன.. இன்றைய தலைமுறையினர் இவைகளை அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.
10 வயதில் குடும்ப வறுமை காரணமாக நாடகங்களில் நடிக்க தொடங்கியவர்.. அதிலும் நிறைய பெண் வேஷம்தான் போடுவாராம்.. சின்ன வயசுல ரொம்ப அழகா இருப்பாராம்.. அதனாலேயே பெண் வேடம் இவருக்கு தேடிவந்தது.பிறகு சினிமாவில் நுழைந்தார்.. “சிங்காரி” படத்தில் “டணால்” என்ற வார்த்தையை பயன்படுத்தியதால், டணால் தங்கவேலு என்றே இவர் அழைக்கப்பட்டார்.. ஒல்லியான தேகம் இருந்தாலும், அந்த இளம் வயதிலேயே, வயதான கெட்டப்பையும் துணிந்து ஏற்றவர் தங்கவேலு. கல்யாண பரிசு: இவரது “கல்யாணப் பரிசு” காமெடியானது, சினிமா உலகில் இன்றுவரை மாஸ்டர் பீஸாக நின்றுவிட்டது.
ஒருமுறை மூத்த பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் பேட்டி ஒன்றில், எம்ஜிஆருக்கும், தங்கவேலுக்கும் உள்ள ஒற்றுமைகளை பற்றி கூறியிருந்தார்.. எம்ஜிஆர் பிறந்த அதே 1917-ம் ஆண்டில், அதே ஜனவரி மாதத்தில் பிறந்தவர்தான் கே.ஏ.தங்கவேலு. எம்ஜிதுர் பிறந்தது ஜனவரி 17-ம் தேதி… தங்கவேலு பிறந்தது ஜனவரி 15-ம் தேதி. அந்த வகையில் எம்ஜிஆருக்கு 2 நாட்கள் மூத்தவர்.. எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில்தான் தங்கவேலுவும் அறிமுகமானார்.
எம்ஜிஆருக்கு சினிமா வாய்ப்பை பெற்றுத் தந்த எம்.கே.ராதாதான், தங்கவேலுவிற்கும் சினிமா வாய்ப்பை பெற்றுத் தந்தார்” என்று நினைவுகூர்ந்திருந்தார். திராவிட பற்றாளர்: தங்கவேலுவை பொறுத்தவரை தீவிரமான திராவிட பற்றாளர்.. திமுகவின் தீவிரமான உறுப்பினராக இருந்தவர் தங்கவேலு.. அவர் மறைந்தபோது திமுகவின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.. தமிழ் மொழியும், திராவிட பற்றும் மிக்கதாலேயே, இவரது உச்சரிப்புகள் அனைத்துமே மிகசிறப்பாக இருக்கும். தங்கவேலுவிடம் 2 விஷயங்கள் பலரையும் இன்றுவரை ஆச்சரியப்படுத்துகிறது..
நாடகத்தில் நடித்த காலத்தில் இருந்து கடைசிவரை அவருக்கு உறுதுணையாக இருந்தவர் கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன்தான்.. அதனால்தான், என்.எஸ்.கே வின் உருவப்படத்தை நன்றியை தெரிவிக்கும்விதமாக கடைசிவரை கழுத்தில் அந்த செயினை அணிந்திருந்தாராம் தங்கவேலு. அதேபோல, தீபாவளி பண்டிகை நாளில், எப்போதுமே லுங்கியும் தொப்பியும் அணிந்து கொள்வாராம்.. ஒருமுறை அவரிடமே பத்திரிக்கையாளர் கேட்டார்கள்..
எதுக்காக தீபாவளி பண்டிகை நாளில் லுங்கியும் தொப்பியும் போடுகிறீர்கள்? என்று கேட்டார்கள்.. தீபாவளி பண்டிகை: அதற்கு தங்கவேலு, “ஒருமுறை தீபாவளி அன்னைக்கு ஒரு நாடகம் போட வேண்டியிருந்தது.. அப்போது துணி வாங்குவதற்கு என்கிட்ட காசு எதுவும் இல்லை.. அப்போது ஒரு லுங்கி வியாபாரியான முஸ்லிம் பாய், என்னிடத்தில் எனக்கும், என்னுடைய நாடக கம்பெனியில் வேலை செய்கிறவர்களுக்கும் லுங்கியை அன்பளிப்பாக கொடுத்தார். நானும் என்னுடைய நாடகக்குழு அனைவரும் அந்த லுங்கியை அணிந்து நடித்தோம்..அவர் மட்டும் அன்று உதவாமல் போயிருந்தால், அன்றைய தினம் நிறைய சிக்கல்களை நாங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
அவர் கொடுத்த ஞாபகமாகவே, எவ்வளவுதான் எனக்கு வசதி வந்தாலும், தீபாவளி அன்று இந்த லுங்கியும் தொப்பியை அணிந்து கொண்டிருக்கிறேன் என்றாராம். தமிழ்ப்பற்று: அதுதான் தங்கவேலு – நேரிலே பேசும்போதும் சரி, படங்களில் நடிக்கும்போதும் சரி, அறச்சொற்களை பயன்படுத்துவதை அறவே தவிர்த்த மாபெரும் கலைஞர்தான் டணால் தங்கவேலு. தமிழ் தவிர பிற மொழிப்படங்கள் எதிலும் நடிப்பதில்லை என்பதை தன் கடைசிவரை மூச்சுவரை கடைப்பித்த தமிழ்ப்பாற்றாளர்தான் நம்முடைய தங்கவேலு..!!

