‘‘பா.ஜ.க-வில் இணைந்துவிட்டால் விசாரணை வளையத்திலிருந்து எதிர்க்கட்சி்யினர்கூட விடுவிக்கப்பட்டு விடுகிறார்களே…?’’
‘‘ஆதாரங்கள் முறையாக இருப்பதால்தான் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. இது ஆளுங்கட்சியாக இருந்துவரும் பா.ஜ.க-வினருக்கும் பொருந்தும். எனவே, ஆளும் கட்சியினர் மீதும் சோதனை மேற்கொள்ளப்படுகிறதுதான். ஆனால், அவை வெளியில் தெரியாமல் போய்விடுகிறது. மற்றொரு விஷயம்… கடந்த 9 ஆண்டு காலம் எந்தவொரு ஊழல் குற்றசாட்டும் இல்லாமல் ஆட்சி நடத்திவருவது பா.ஜ.க-தானே!’’

”ஆனால், கர்நாடக தேர்தலில் ”40% கமிஷன் விவகாரம்தான் ஆட்சி மாற்றத்திற்கு ஒரு காரணம் எனப்படுகிறதே?”
“குற்றசாட்டுகள் சொல்லலாம், ஆதாரத்தோடு நிரூபிக்க இங்கே என்ன இருக்கிறது. எதுவுமே இல்லையே. ஆதாரங்கள் முறையாக இருப்பதால் தான் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. அமலாக்கத்துறையிடம் ஆதாரம் இல்லையென்றால் நீதிமன்றத்தில் முறையிடலாமே.”

”தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலிருந்தே திமுக கூட்டணி பலமாக இருக்கிறது… உங்கள் கூட்டணியின் நிலையை ஏன் இப்படி இருக்கிறது?”
“எண்ணிக்கையை மட்டும் வைத்து வலுவாக இருக்கிறது என பேசுகிறோம். ஆனால் இரண்டாண்டு ஆட்சியின் மீதான அதிருப்தி, லஞ்சம், ஊழல் மற்றும் அரசு திட்டங்களின் நடக்கும் முறைகேடு என எல்லாவற்றையும் கடைகோடி சாமானியர்கள் வரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பலம் என்றால் கூட்டணி எண்ணிக்கையில் வைத்து வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். மக்கள் ஆதரவை திமுக கூட்டணி இழந்து வருகிறது, அது தேர்தல் வந்தால் தெரியும்.”

