தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மிகக் குறைந்த வயதுடையவர்கள் டிராக்டர்களை ஓட்டிச் செல்வதை தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் வேளாண் பணிகள், கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஏராளமான டிராக்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை சிறுவர்களும், குறைந்த வயதுடையவர்களும் ஓட்டிச் செல்கின்றனர். இந்த நடைமுறையை தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, தருமபுரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அழகேசன் கூறியது: தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காக ஏராளமான டிராக்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆங்காங்கே இவற்றை இயக்கும் சிறுவர்களில் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் பழகுநர்களாகவும், போதிய அனுபவமற்றவர்களாகவும் உள்ளனர்.
வேளாண் பணிகளுக்காக விளை நிலங்களில் பயன்படுத்தப் படும் டிராக்டர்களை சிறுவர்கள் அல்லது குறைந்த வயதுடையவர்கள் இயக்கும் போது பெரிய பாதிப்புகள் ஏற்படாது. குறிப்பாக மற்றவர்களுக்கு ஆபத்து நேராது. ஆனால், பொது சாலைகளில் டிராக்டர்களை ஓட்டிச் செல்லும் சிறுவர்கள் மற்றும் குறைந்த வயதுடையவர்களால் பல இடங்களில் சிறுசிறு விபத்துகள் ஏற்படுகின்றன.
போதிய அனுபவம் இல்லாமல் டிராக்டர்களை இயக்குவதே இதற்குக் காரணம். சில தினங்களுக்கு முன்னர் தருமபுரி – சேலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த புதிய டிராக்டர் ஒன்றை சுமார் 16 முதல் 18 வயதுடைய ஒரு சிறுவன் ஓட்டிச் சென்றார். இலக்கியம்பட்டி பகுதியில் சென்ற போது டிராக்டரின் குலுக்கலால் அந்த சிறுவனின் சட்டைப் பையில் இருந்த செல்போன் சாலையில் விழுந்தது.
இதனால் பதற்றமான சிறுவன் டிராக்டரை ‘ஜிக்ஜாக்’ வடிவில் ஓட்ட சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தடுமாறினர். மேலும், சாலையில் விழுந்த செல்போன் மீது மற்ற வாகனங்கள் ஏறினால் சேதமடையும் என்பதால் அதனை உடனே எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டிராக்டரை நிறுத்துவதற்காக சாலையின் இடதுஓரமாக ஓட்டிச் செல்ல முயன்றார்.
அப்போது, பின்னால் வரும் வாகனங்கள் குறித்த அக்கறை ஏதுமின்றியும், போக்குவரத்து சிக்னல் எதையும் ஏற்படுத்தாமல் டிராக்டரை ஓட்டினார். இதனாலும் அவ்வழியே வந்த அடுத்தடுத்த வாகன ஓட்டிகளும் தடுமாற்றமடைந்து சிறுவனை கண்டித்துவிட்டு கடந்து சென்றனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தால் விபத்து எதுவும் ஏற்படவில்லை.
செல்போனை உரிய பாதுகாப்புடன் வைத்துச் செல்லாததும், சாலையில் தவறி விழுந்த செல்போன் மீதான அக்கறையில் வண்டியை தாறுமாறாக ஓட்டியதும், சிக்னல் ஏற்படுத்தாமல் வண்டியை ஓரம் கட்ட நினைத்ததும் அந்த சிறுவனுக்கு ஓட்டுநர் பணியில் போதிய அனுபவம் இல்லை என்பதையே காட்டுகிறது.
இவ்வாறானவர்கள் சில நேரங்களில் பெரும் விபத்துகளுக்குக் காரணமாகி விடுகின்றனர். எனவே, இதுபோன்றவர்களை கட்டுப்படுத்தி, அவர்கள் போதிய பயிற்சியுடன் பொது சாலைகளில் வாகனம் இயக்கும் வகையில் போக்குவரத்துத் துறையும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


இதேபோன்று சிறுவர்கள் டிராக்டர் ஓட்டுவதையும் லைசென்ஸ் இல்லாமல் டிராக்டர் ஓட்டுவதையும் செல்போன் வீடியோவாக கவர் செய்து அதை ஒரு சிடி செய்து அதையே ஆதாரமாக வைத்து காவல்துறையில் புகார் செய்யவும் புகார் செய்தால் கண்டிப்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்