யாரெல்லாம் போட்டியில்?
கர்நாடகா பா.ஜ.க-வைப் பொறுத்தவரையில், பா.ஜ.க பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தென்னிந்திய மாநிலங்களில் பொறுப்பாளராக இருக்கிறார். அதீத அரசியல் செல்வாக்குள்ள பி.எல்.சந்தோஷ் ஒருபுறம் எதிர்கட்சித் தலைவராக தீவிரம் காட்டி வருகிறார்.
சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, ‘பி.எல்.சந்தோஷின் தலையீடு மற்றும் தவறான வழிகாட்டுதலால்தான், பா.ஜ.க தோல்வியைச் சந்தித்தது’ என எடியூரப்பா குழுவினர் ஒருபுறம் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ‘முன்னாள் முதல்வராக இருந்ததால், எனக்கே எதிர்கட்சித் தலைவர் பதவியைக் கொடுக்க வேண்டும்’ என முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும், அரசியல் களத்தில் செல்வாக்கின் அடிப்படையில் தனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணனும் முயன்று வருகின்றனர்.
இதற்கிடையே, ’பா.ஜ.க தலைவர்களான முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, சில முன்னாள் அமைச்சர்கள், காங்கிரஸாருடன் சமாதான அரசியல் செய்கின்றனர்’ என புகார் தெரிவித்து, அரசியல் களத்தில் அனலைக் கிளப்பி வரும் பசனகெளவுடா பாட்டில் யாத்னலும் போட்டியில் குதித்திருக்கிறார்.
முதன் முறையாகச் சட்டப்பேரவையில்…
இதுபோன்ற போட்டிகளால், கர்நாடகா அரசியலில் முதன் முறையாக, எதிர்க்கட்சித் தலைவரைக்கூட தேர்வுசெய்ய முடியாமல் பா.ஜ.க மேலிடம் திக்கித் திணறி வருகிறது. இதன் விளைவால், இன்று நடந்த கர்நாடகா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், முதன் முறையாக எதிர்கட்சித் தலைவரே இல்லாமல், பா.ஜ.க உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

