புதிய நாடாளுமன்றத்தை சாவர்க்கர் பிறந்தநாளான மே 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைப்பார் என்ற அறிவிப்பு வெளியான நாள்முதல் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து, ஏன் குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை, சாவர்க்கர் பிறந்தநாளில் எதற்கு, மோடி திறக்கக் கூடாது என இதைச்சுற்றியே பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்துவந்தன. இன்றுகூட, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டன.
இதுவொருபக்கமிருக்க, புதிய நாடாளுமன்ற அவையில் செங்கோல் நிறுவப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று தனிக் கட்சித் தொடங்கிய ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத், `2026-க்குப் பிறகு மக்கள்தொகை வளர்ச்சியைக் கணக்கிட்டு நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

