கரூர் மாவட்டம், கடவூர் அருகே இருக்கிறது வீரணம்பட்டி. இந்த கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில், வருடாவருடம் ஜூன் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் கடந்த ஜூன் 7 -ம் தேதி அந்த காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சார்பாக கோயிலுக்குள் சென்று வழிபாடடு நடத்த முயன்ற சக்திவேல் என்ற இளைஞர், மாற்று சமூகத்தினரால் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த மற்றொரு தரப்பினர் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட, வருவாய்த் துறையினர் அனைத்து தரப்பினரும் கோயிலில் வழிபட வேண்டும் என பேச்சுவார்த்தை மூலம் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு ஒருதரப்பு உடன்படவில்லை. இதனால், அன்று தற்காலிகமாக கோயிலை பூட்டிய அதிகாரிகள், தொடர்ந்து இருதரப்பு மக்களிடமும் பேச்சுவார்தையில் ஈடுப்பட்டனர். ஆனால், அப்படியும் சுமூக உடன்பாடு ஏற்படாததால், அப்போதைய குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, கோயிலை பூட்டி சீல் வைத்தார்.
இதனால், ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள், அவரது காரை மறித்து போராட்டம் நடத்தினர். அதோடு, மரங்களை வெட்டி சாய்த்து, காவல்துறையினர் அரசு அதிகாரிகளை நகரவிடாமல் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில், கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் வீரணம்பட்டியில் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு, அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில், மூன்று கட்டமாக நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் கோயிலுக்குள் சென்று வழிபட அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மாற்று சமூகத்தினர் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க தயக்கம் காட்டினார். ‘கோர்ட்டில் போய் பார்த்துகொள்ளுங்கள்’ என்று அவர்களிடம் முதலில் கடுமை காட்டிய ஆட்சியர், அதன்பிறகு தொடர்ந்து இருதரப்பிடமும் சுமூக முடிவு ஏற்பட தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.

