சென்னை: சென்னை எழும்பூர் – கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், வரும் 27ம் தேதி முதல் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது சிவகாசி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை தவிர 9 முக்கிய ரயில்கள் தமிழகத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் இன்று முதல் நிற்கின்றன. சிவகாசி நகரம் பட்டாசு மற்றும் பிரிண்டிங் துறையில் பெயர் போன நகரம்.இப்போது பிரிண்டிங் துறை நலிவடைந்து வரும் நிலையில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழில் மட்டுமே மக்களுக்கு கைகொடுத்து வருகிறது. இங்கு ஏராளமான மக்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட சிவகாசியில் ரயில் நிலையம் இன்னும் பெரிய அளவில் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
தற்போதைய நிலையில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்களில் இருந்து இறங்கி செல்லும் மக்கள், பேருந்து நிலையம் செல்ல அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வருகிறார்கள். சிவகாசி ரயில் நிலையத்தில் தற்போது தினமும் ஐந்து ரயில்கள் நின்று செல்கின்றன. இதுதவிர சிறப்பு ரயில்கள் நின்று செல்கின்றன. சென்னையில் இருந்து வரும் ரயில்களில் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் நின்று செல்கிறது. இதேபோல் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்கிறது. இது தவிர வாரத்தில் சென்னையில் இருந்து 3 நாட்கள் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் நின்று செல்கிறது.
இந்நிலையில் சென்னை கொல்லம் ரயில் சிவகாசியில் நின்று செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து சென்னை எழும்பூர் – கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், வரும் ஜூலை 27ம் தேதி முதல் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விருதுநகரில் அதிகாலை 1.25 க்கு நிற்கும் கொல்லம் ரயில், அதன்பிறகு சிவகாசியில் அதிகாலை 1.52க்கு நிற்கும் என்றும் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசிக்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் 2.09க்கு சென்று அங்கும் ஒரு நிமிடம் நிற்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனிடையே இன்று முதல் சில ரயில்கள் முக்கிய ரயில்களில் நின்று செல்கிறது. அதன் பட்டியலையும் பார்ப்போம். நெல்லை – பாலக்காடு – நெல்லை (வ.எண்.16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் குண்டாரா, கீழக்கடையம் ரயில் நிலையங்களில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். சென்னை எழும்பூர் – மதுரை (வ.எண்.12637) பாண்டியன் எக்ஸ்பிரஸ் மணப்பாறை ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும் சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் (வ.எண்.22661) ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மண்டபம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். நெல்லை – பாலக்காடு (வ.எண்.16791) பாலருவி எக்ஸ்பிரஸ் பாவூர்ச்சத்திரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 முதல் நின்று செல்லும். ராமேஸ்வரம் – பனாரஸ் (வ.எண்.22535) வாராந்திர ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 முதல் நின்று செல்லும். சென்னை எழும்பூர் – நெல்லை (வ.எண்.12631) நெல்லை எக்ஸ்பிரஸ் சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும் கோவை – ராமேஸ்வரம் (வ.எண்.16618) வாராந்திர ரயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். சென்னை எழும்பூர் – தூத்துக்குடி (வ.எண்.12693) முத்துநகர் எக்ஸ்பிரஸ் திருமங்கலம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். சென்னை எழும்பூர் – கொல்லம் – சென்னை எழும்பூர் (வ.எண்.16101/16102) கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. அதன்படியே ரயில்கள் நின்று செல்கின்றன.

