பாட்னாவில் பைக் சாகசத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு சாகசத்தில் ஈடுபடுவோர் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ்களாக பதிவேற்றம் செய்து வருகிறார்கள். இதனால் சாலைகளில் பயணிக்கும் இதர வாகனங்களும், பாதசாரிகளுக்கும் பெரும் ஆபத்தை சந்தித்து வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு சிறுமிகள் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதில் அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. இதேபோல் கடந்த மாதம் வெளியான மற்றொரு வீடியோவில் பைக்கில் இரண்டு பேர் அதிவேகமாக பயணிக்கிறார்கள். அதில் ஒருவர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார். இதையடுத்து மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறைகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் பைக் சாகசத்தில் ஈடுபடுவோரிடம் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் தப்பவில்லை. இன்று காலை அன்னே மார்க் பகுதியில் நிதிஷ் குமார் நடைபயணத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அசுர வேகத்தில் வந்த 2 பைக்குகள் திடீரென பாதுகாப்பு வளையத்தை மீறி உள்ளேச் சென்றது. தன் பக்கம் பைக்குகள் வருவதை பார்த்த நிதிஷ் சுதாரித்து விலகிவிட்டார்.

இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து முதல்வரின் பாதுகாப்பில் கவனக்குறைவு இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதையடுத்து பைக்கில் வந்தவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறை மற்றும் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் முதலமைச்சரின் இல்லத்திற்கு வந்து ஆலோசனை நடத்தினர்.
முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி உட்பட பல அரசியல்வாதிகள் வசிக்கும் பகுதியான சர்குலர் ரோடு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்ற விழா மேடை அருகே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது அவர் நாளந்தா நகரில் ஜன்சபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நிதிஷ் குமார் இருந்த மேடை அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிட்டது. இதற்கிடையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் மீது பைக்குகள் மோத வந்த சம்பவம் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

