கடந்த மாதம் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அமெரிக்க அதிபருடன் பல்வேறு பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். குறிப்பாக, அமெரிக்காவின் சக்திவாய்ந்த எம்கியூ-9 ப்ரிடேட்டர் என்ற 30 ஆளில்லா டிரோன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம், ஜிஇ ஏரோஸ்பேஸ் (GE Aerospace) என்ற அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் போர் விமான இன்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் ஒப்பந்தம் எனப் பல்வேறு ராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தகள் கையெழுத்திடப்பட்டன. இந்த நிலையில், இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் Fact Sheet அறிக்கையில், தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கடற்படை கப்பல்கள் பழுதுபார்க்க வந்துப்போகும் ஒப்பந்த விவரம் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை:
`அடுத்த தலைமுறை பாதுகாப்பு கூட்டாண்மை’ என்ற தலைப்பின்கீழ் அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் Fact Sheet-ல் , “அமெரிக்க கடற்படை காட்டுப்பள்ளியில் (சென்னை) உள்ள லார்சன் அண்ட் டூப்ரோ(L&T) கப்பல் கட்டும் தளத்துடன் கப்பல் பழுதுபார்ப்பு ஒப்பந்தத்தை (Master Ship Repair Agreement (MSRA)) முடித்துள்ளது. மசாகான் டாக் லிமிடெட் (மும்பை) மற்றும் கோவா கப்பல் கட்டும் தளம் (கோவா) ஆகியவற்றுடன் ஒப்பந்தங்களை இறுதி செய்து வருகிறது. இந்த ஒப்பந்தங்கள் இந்திய கப்பல் கட்டும் தளங்களில் சேவை மற்றும் பழுதுபார்ப்புக்கு இடைப்பட்ட அமெரிக்க கடற்படை கப்பல்களை அனுமதிக்கும், இது பல அரங்குகளிலும் அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளுக்கான செலவு குறைந்த மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் நிலையான செயல்பாடுகளை எளிதாக்குகிறது!” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
பூவுலகின் நண்பர்கள் அறிக்கை:
இதை மேற்கோள்காட்டி பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “L&T நிறுவனத்துடன் அமெரிக்க கடற்படை மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஆகஸ்ட் மாதம், 2022ஆம் ஆண்டே அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சார்லஸ் ட்ரூ எனும் கப்பல் காட்டுப்பள்ளியில் உள்ள கப்பல் தளத்திற்கு பழுது மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக வந்து சென்றது. காட்டுப்பள்ளியைப் பொறுத்தமட்டில் அங்குள்ள துறைமுகத்தை லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், மரைன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட், எல் அண்ட் டி ஷிப் பில்டிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் வாயிலாக அதானியின் துறைமுக நிறுவனம் 2018ஆம் ஆண்டே விலைக்கு வாங்கியது.
இத்துறைமுகத்தை 53 ஆயிரம் கோடி செலவில் ஆண்டுக்கு மொத்தமாக ஆண்டிற்கு 320 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் அளவிற்கு 6110 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய அதானி துறைமுக நிறுவனம் திட்டமிட்டிருந்தது. காட்டுப்பள்ளி துறைகம் மற்றும் L&Tயின் கப்பல் கட்டும் நிறுவனம் ஆகியவற்றால் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள சூழல் மாசு மற்றும் கடலரிப்பால் அப்பகுதி மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் அதானியின் துறைமுக விரிவாக்கத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில்தான் L&T நிறுவனத்துடன் அமெரிக்கா கப்பல்படை மேற்கூறிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த செயலை, அமெரிக்க, இந்தியா, ஆஸ்திரேலியா, மற்றும் ஜப்பான் நாடுகளிடையான QUAD என்னும் ராணுவக் கூட்டமைப்பின் ஒருபகுதியாகவே பார்க்க வேண்டும். குறிப்பாக இலங்கையில் சீனா கப்பல்தளம் அமைத்துள்ள நிலையில், சென்னையில் அமெரிக்க கப்பல்தளம் என்பது தெற்கு ஆசியப் பகுதியில் பதற்றத்தை அதிகப்படுத்தக் கூடும். கூடுதலாக மாறிவரும் சூழலில் புவிசார் அரசியலில் தமிழ்நாடு ஒரு மையப்புள்ளியாக மாறுவதற்கான வாய்ப்பை உருவாக்கக் கூடும். இந்தியப் பெருங்கடலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பை அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தம் வழங்ககூடும். ஏற்கெனவே ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுடனான அமெரிக்க அரசின் நிலைப்பாடுகள் எதிராக உள்ள நிலையில் ஒருவேளை பிற்காலத்தில் போர்ச்சூழல் உருவானால் அமெரிக்க ராணுவம் காட்டுப்பள்ளியை தனக்கான தளமாக பயன்படுத்தக்கூடும் என்கிற அச்சம் எழுகிறது.
வரலாற்று அடிப்படையில் இந்திய அரசு அணிசேராக் கொள்கையைப் பின்பற்றி வந்த நிலை கடந்த காலங்களில் மாறி வருகிறது. குறிப்பாக மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்ற பின் இந்த நிலை உருவாகி வருகிறது. வெளியுறவுக் கொள்கையில் பல மாற்றங்களை செய்து வருகிறது பா.ஜ.க.வின் தற்போதயை ஆட்சி. அமைதிக்கான செயல்பாடுகளை புறக்கணித்து விட்டு, முரண்களை அதிகரிக்கும் போக்குடனே செயல்படுகிறது தற்போதைய ஒன்றிய அரசு. மேற்கூறிய விஷயங்களைக் கருத்தில்கொண்டு தமிழ் நாடு அரசும், தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களும் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்க வேண்டும்!” எனக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
த.வா.க தலைவர் வேல்முருகன் கண்டனம்:
அதேபோல தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான தி. வேல்முருகன், “இந்த ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட போவது, தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் தான். தமிழ்நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்துடன், அமெரிக்க ராணுவம் ஒரு ஒப்பந்தை மேற்கொள்வதையும், அந்த ஒப்பந்தமானது அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதையும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இது தமிழ்நாட்டின் ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும். முக்கியமாக, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் மற்றும் அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டம் என்பது தமிழ்நாட்டை பேரழிவுக்கு இட்டுச்செல்லும் ஒப்பந்தமாகும்.

எனவே, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம், அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டங்களை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்! மேலும், சென்னை, கோவை, ஒசூர், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் ராணுவத் தளவாட உற்பத்திக் கேந்திரங்கள் அமைக்கும் திட்டங்களையும், தமிழ்நாட்டை ராணுவமயமாக்கும் நடவடிக்கைகளையும் கைவிட ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.
ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா:
அதேபோல மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா இந்த நடவடிக்கையை `அடகு வைக்கப்படும் தேசப்பாதுகாப்பு..?’ எனக்கூறி கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், “தமிழ்நாட்டை அமெரிக்காவின் கடற்படைத் தளமாக மாற்றும் இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அண்மையில் மேற்கொண்ட அமெரிக்கப் பயணம், அமெரிக்க ராணுவத்தின் நீண்டநாள் கனவை நனவாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அமெரிக்கக் கப்பற்படையின் சீரமைப்புப் பணிக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று அம்பலமாக்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ராணுவத் தளவாட உற்பத்தி குறித்தும், இதனூடாக அமெரிக்காவிற்கு வெளியே ஆசியப்பகுதியில் அமெரிக்காவிற்கான ராணுவத் தளவாட, ஆயுத உற்பத்தி மையங்கள் தமிழ்நாட்டில் உருவாவதற்கான வழியும் பிறந்துள்ளது. எனவே அமெரிக்காவின் ராணுவத் தளவாட உற்பத்தி கேந்திரங்கள் அமைக்கும் முயற்சியைத் தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கடும் அழுத்தம் கொடுத்துத் தடுத்து நிறுத்தி ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு நம் தாய்த் தமிழ்நாட்டில் தளம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும்!” என கோரிக்கை வைத்திருக்கிறார்.

