பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். முதல்நாளில் டெஸ்லா தலைமை அதிகாரி எலான் மஸ்க் உள்ளிட்ட முதலீட்டாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினமான நேற்று நியூயார்க்கிலுள்ள ஐ.நா சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

அதன்பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடனை சந்திக்கும் விதமாக மோடி வாஷிங்டன் வந்தடைந்தார். அதைத் தொடர்ந்து மோடி, பைடன் தம்பதி அலெக்ஸ்சாண்ட்ரியாவிலுள்ள தேசிய கல்வி அறக்கட்டளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினர்.
அப்போது பிரதமர் மோடி, சந்தனக் கட்டையினாலான பெட்டியொன்றை அதிபர் பைடனுக்கு பரிசளித்தார். இந்தப் பெட்டியானது, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தனித்துவமான கைவினைக் கலைஞரால், மைசூர் சந்தனக் கட்டைகளால் செய்யப்பட்டதாகும். அந்தப் பெட்டியில் வெள்ளியிலான விநாயகர் சிலை, எண்ணெய் விளக்கு இருந்தது. இந்த வெள்ளி சிலையும், எண்ணெய் விளக்கும் கொல்கத்தாவில் வெள்ளிப் பொருள்களைத் தயாரிக்கும் ஐந்தாம் தலைமுறை குடும்பத்தின் கைவினைக் கலைஞர்களால் செய்யப்பட்டதாகும்.

இது தவிர பெட்டியில் 10 பொருள்களும் இருந்தன. அந்த 10 பொருள்களில் `தமிழ்நாட்டின் வெள்ளை எள்’ இடம்பெற்றிருந்தது. கூடவே ராஜஸ்தான் கைவினைக் கலைஞர்களால் செய்யப்பட்ட 24 காரட் ஹால்மார்க் தங்க நாணயம், 99.5% தூய்மையான வெள்ளியால் செய்யப்பட்ட ஹால்மார்க் வெள்ளி நாணயம், குஜராத் உப்பு ஆகியவையும் இடம்பெற்றிருந்தன.
மேலும், பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு 7.5 காரட் பச்சை நிற வைரக்கல் ஒன்றைப் பரிசளித்தார் மோடி. இந்த வைரக்கல்லானது சூரிய சக்தி, காற்றாலை சக்தி ஆகியவைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், ‘The Ten Principal Upanishads’ (தி டென் பிரின்சிபல் உபநிடதங்கள்) என்ற புத்தகத்தின் முதல் பதிப்பை பைடனுக்கு பரிசளித்தார் மோடி.

அதேபோல் பைடன் தம்பதி, 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கையால் செய்யப்பட்ட, மிகப் பழைமையான அமெரிக்க புத்தகக் கேல்லியை (book galley) மோடிக்கு சிறப்புப் பரிசாகத் தந்தனர். கூடவே, விண்டேஜ் அமெரிக்க கேமராவையும், ஜார்ஜ் ஈஸ்ட்மேனின் முதல் கோடாக் கேமராவின் காப்புரிமை நகல் அச்சு, அமெரிக்க வனவிலங்கு புகைப்படம் எடுத்தல் பற்றிய புத்தகத்தையும் மோடிக்கு பைடன் தம்பதி பரிசளித்தார். அதைத் தொடர்ந்து மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இது குறித்து மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், “இன்று வெள்ளை மாளிகையில் எனக்கு விருந்தளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் ஆகியோருக்கு நன்றி. நாங்கள் பல விஷயங்கள் குறித்து உரையாடினோம். எங்கள் உரையாடல் சிறப்பாக அமைந்தது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

