இது தொடர்பாகச் சமீபத்தில் விளக்கமளித்த அமைச்சர் சேகர் பாபு, ”புதிதாகக் கட்டப்பட்டுவரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளின் போக்குவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பேருந்து நிலையம் மக்களுடைய அடிப்படைத் தேவைகள் எதையும் கணக்கிடாமல் வடிவமைக்கப்படுகிறது. ஜூன் மாத இறுதிக்குள் திறந்துவைத்திட வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தாலும், பேருந்து முனையம் மக்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்திடும் வகையில் அமைத்திட வேண்டும், ஆகவே ஜூலை இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும்” என்றிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.
“சென்னையின் மாபெரும் பிரச்னை போக்குவரத்து நெரிசல். அதனைச் சீர்செய்திடும் நோக்கில் கொண்டு வரக்கூடிய திட்டத்தை இவ்வளவு கால தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல. அதிலும் மக்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாதவாறும், பேருந்து வந்து செல்ல ஏதுவாகவும் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை என அமைச்சர் சேகர் பாபு சொல்வது ஒருபோதும் ஏற்புடையதல்ல. திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. கட்டுமான பணிகளை அரசு அதிகாரிகளும் பொறியாளர்களும் முறையாகக் கவனிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டார்கள் என்பதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறாரா…?” என வினவியுள்ளார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.
மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் சென்னையில் மையப் பகுதியிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்திட முறையான சேவைகளை அரசு ஏற்படுத்திட வேண்டும் எனக் கோரிக்கையும் வைக்கிறார்கள்.

