சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், கடல் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, வட்டக்கோட்டை போன்ற இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் சென்று வருகின்றனர். மேலும், சூரிய உதயம், சூரிய மறையும் காட்சி ஆகியவற்றை காணவும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். கடலில் அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவிடம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடலில் தண்ணீர் மட்டம் குறையும் சமயங்களில் விவேகானந்தர் பாறைக்கு படகு இயக்கப்படும். ஆனால், திருவள்ளுவர் சிலைக்கு படகு இயக்க இயலாத நிலை ஏற்படும். இதற்குத் தீர்வு ஏற்படுத்தும்விதமாக, விவேகானந்தர் நினைவுப் பாறையிலிருந்து திருவள்ளுவர் பாறைக்குப் பாலம் அமைக்க கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முடிவுசெய்யப்பட்டது.

இந்த நிலையில் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் பாறைக்கும் இடையே கண்ணாடி இழை பாலம் அமைக்க 37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான ஆய்வுப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. கண்ணாடி இழை பாலம் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று தொடங்கி வைத்தார். இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

