திருச்சி : திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரூர் ஊராட்சியில், இடையப்பட்டி, முத்தையா நல்லூர், பேரூர் பகுதிகளில் சுமார் 6000 க்கு மேற்பட்ட மக்கள், சுமார் 2000 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இந்த பேரூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை, குறிப்பாக குடிநீர் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது, மாதத்திற்கு ஒரு முறை தான் உப்பு நீரை குடிநீராக பஞ்சாயத்து நிர்வாகம் வழங்குகிறது. இதனால் பொதுமக்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் அங்கு பரவலாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதை பொது மக்கள் கேட்டால் தகாத வார்த்தைகளால் பஞ்சாயத்து தலைவர் திட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகரித்து முதியோர்களும் குழந்தைகளும் மலேரியா டைபாயிடு மற்றும் வைரஸ்சால் ஏற்படும் தொற்று நோய்களுக்கு அடிக்கடி ஆளாகின்றனர்..
போதிய மருத்துவ வசதியும் போக்குவரத்து வசதியும் கூட இங்கு இல்லை, 90 சதவிகித வீடுகளில் கழிவறை வசதி இல்லை, இதனால் மக்கள் இப்போதும் திறந்த வெளியில் தான் மலம் கழிக்கின்றனர். ஆனால் பஞ்சாயத் நிர்வாக ஆவணங்கள் படி பெரும்பாலான வீடுகளுக்கு கழிவறை வசதி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
போதிய தெரு விளக்கு வசதிகளும் இல்லாததால் பொது மக்கள், பெண்கள் இரவு நேரங்களில் வெளியில் சென்று வர அச்சப்படுகின்றனர். தார் சாலையோ Concrete சாலையோ இல்லாததால் அணைத்து வீதிகளும் குண்டும் குழியுமாகவே காணப்படுகிறது. இதனால் சிறுவர்களும் முதியவர்களும் பல முறை விழுந்து காயம் ஏற்படும் நிலையும் உள்ளது.
ஆக, இது போன்ற தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுவதை அறிந்து நமது மக்கள் ஆணையம் கள ஆய்வு குழு விசாரித்தது. அந்த விசாரணையில் பஞ்சாயத்து நிர்வாகத்தில் பல்வேறு குறைபாடுகள் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அது ஒரு புறம் இருந்தாலும் தற்போது தேவையான அடிப்படை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய அலுவலர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்களுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் இனி வரும் காலங்களிளாவது நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இது இப்படி இருக்க, ஸ்வச் பாரத் அபியான் திட்டம் மூலம் திருச்சியில் உள்ள அனைத்து கிராமங்களும் முழுமையாக பலன் பெற்றுள்ளன என்று கூறப்படுகிறது. ஆனால் பேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தில் வீட்டு தண்ணீர் குழாய்களோ, கழிப்பறையோ, நல்ல சாலைகளோ, திட கழிவு மேலாண்மை அமைப்புகளோ இருப்பதாக தெரியவில்லை.

