முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ளவிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை 3:50 மணியளவில் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்குச் செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சிதம்பரம் – மயிலாடுதுறை பிரதான சாலையில் அரசூர் என்ற பகுதியில் ஆளுநர் ரவியின் காரை, வழிமறிக்க முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கறுப்புக்கொடி காண்பித்தும், கண்டன முழக்கங்களிட்டும் எதிர்ப்பைக் காட்டியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து, உடனடியாக ஆளுநரைத் திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளர் குமரேசன், மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் விஜய், ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், சீர்காழி ஒன்றியச் செயலாளர் அசோகன், கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் கேசவன் ஆகியோரை பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும், அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

