சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வரும் விரைவில் தற்போது விசாரணை தீவிரமடைந்துள்ளது அந்த வகையில் இன்று சேலம் நகராட்சி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஜெயலலிதா அவர்கள் விரும்பி வசித்து வந்த இடமாக கோடநாடு இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதாவது கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி அன்று இரக்கமில்லா ஓர் அரக்கர் கூட்டம் கோடநாடு தோட்டத்துக்குள் புகுந்தது. அந்த கூட்டம் தோட்டத்தை காவல் காத்து வந்த காவலாளி ஓம்பதூரை கொலை செய்தது.
கோடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவத்தை அந்த கூட்டம் நடத்தி சென்றது. இந்த கொலை, கொள்ளை எதற்காக நடந்தது என்று கண்டறியும் முன்பாகவே ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரான கனகராஜ் கொலை செய்யப்பட்டார். அதேபோல் கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி மற்றும் கணினி உள்ளிட்ட பொறுப்பினை கவனித்து வந்த தினேசும் கொலை செய்யப்பட்டார். இவ்வாறாக இந்த வழக்கில் அடுத்தடுத்து 6 பேரின் உயிர்கள் பறிபோகியது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மர்மமாக இருக்கும் நிலையில், தற்போது இந்த வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. கோடநாடு கொலை, கொள்ளையை அடுத்து நடைபெற்ற சம்பவங்கள் பெரும் மர்மமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநனரான கனகராஜ் சேலம் சென்னை புறவழிச்சாலையில் கார் விபத்தில் உயிரிழந்தார்.
இது விபத்து என வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் கூட விபத்து பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. எனவே, கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் ஆத்தூரில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆத்தூர் பகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புறவழிச்சாலைகளை இணைக்கும் இடத்தில் எத்தனை வேகத்தடைகள் உள்ளன. அது எப்போது அமைக்கப்பட்டது என்ற விவரத்தை எடுத்துள்ளனர்.
கனகராஜ் விபத்தில் சிக்கிய 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி விபத்து நடந்த சிறிது நேரத்தில் வேகத்தடையில் பைக்கில் வந்த ஒருவர் விழுந்து காயம் அடைந்ததாக ஒரு தகவல் பதிவாகியிருக்கிறது. அவர் யார் என்பது குறித்து விசாரிப்பதற்காக நகராட்சி அலுவலகத்தில் வேகத்தடைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் யார் யார் இந்த நகராட்சி பகுதியில் அதிகாரிகளாக பணியாற்றி இருக்கிறார்கள்.. வேகத்தடை எப்போது அமைக்கப்பட்டது.. எந்தெந்த பகுதியில் இருக்கிறது… தற்போது எந்த இடத்தில் இருக்கிறது.. என்ற விவரங்கள் குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது. அது மட்டும் இன்றி நகராட்சி அலுவலகத்தில் பல்வேறு தகவல்களை பெற்று ஆவணங்களையும் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.
கோடநாடு கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சிபிசிஐடி மேற்கொண்ட இந்த விசாரணை முக்கியம் பெற்றுள்ளது.

