திண்டுக்கல்: பழனி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனுமான ஐ.பி.செந்தில்குமார், உடல்நல பாதிப்பு காரணமாக கட்சிக்காரர்களிடமும், தொகுதி மக்களிடமும் மெடிக்கல் லீவு சொல்லியிருக்கிறார்.
இது தொடர்பாக ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள பதிவு வருமாறு; ”அன்புள்ள நண்பர்களுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் அன்பான வணக்கம். கடந்த இரண்டு நாட்கள் என் உடல் நிலை சம்பந்தமாக மருத்துவர்களை சந்தித்து விட்டு வந்திருக்கிறேன். பல்வேறு ஆலோசனைகளை எனக்கு அவர்கள் வழங்கி இருக்கிறார்கள்.
ஓரிரு வாரங்கள் சுற்றுப்பயணங்கள் அதிகம் இல்லாத வகையில், குறிப்பாக வாகன பயணங்கள் அதிகம் இல்லாத வகையில் சில பயிற்சிகளையும் அதற்கேற்ற மருந்துகளையும் எடுத்துக் கொள்ளச் சொல்லி இருக்கிறார்கள்.” ”அதன் அடிப்படையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓரிரு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டிய அவசிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், எனது உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையில் இந்த பதிவை பதிவிடுகிறேன்.”
”பழனி தொகுதி சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து என்னிடத்தில் நேரடியாகவோ தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள எண்ணுகிற நண்பர்கள் என்னுடைய சட்டமன்ற அலுவலக பொறுப்பாளர் தம்பி லோகு எண் 9159609333. அதே போல என்னுடைய உதவியாளர் தம்பி கார்த்தி எண் 9790360173 ஆகிய எண்களுக்கு, தொடர்பு கொண்டு ஏதேனும் முக்கிய பிரச்சினைகளை குறித்து உங்களுக்கு உதவிட வேண்டும் என்று சொன்னால் தொடர்பு கொள்ளவும். அவர்கள் என்னிடத்தில் சொல்வார்கள்.” ” சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் (அ) நபர்களிடத்தில் உங்களுக்கான தேவைகள் குறித்து பேசி இவ்விருவர்கள்(கார்த்தி மற்றும் லோகு) மூலமாக உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழக நிர்வாகிகள் தாங்கள் ஏதேனும் தகவல்கள் தெரிவிக்க விரும்பினால் கழக பணிகள் குறித்து தெரிவிக்க முற்பட்டால் எனது உதவியாளர் தம்பி கார்த்தி அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.”

