சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் காவல் நிலையத்தில் போலீஸ் எஸ்ஐ ஜான் பிரிட்டோ தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அவரது தற்கொலை முயற்சிக்கு பின்னணியில் உள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலை கிராமம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் ஜான் பிரிட்டோ. இந்நிலையில் தான் ஜான் பிரிட்டோ இன்று காவல் நிலையத்தில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை அங்கு பணியில் இருந்த காவலர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் ஜான் பிரிட்டோவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஜான் பிரிட்டோ ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது பற்றி விசாரிக்கப்பட்டது. இதில் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சாலை கிராமத்தில் நடந்த சட்டவிரோத மது விற்பனைக்கு ஜான் பிரிட்டோ உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் காரணமாக ஜான் பிரிட்டோவை எஸ்ஐ செல்வராஜ் பணியிடமாற்றம் செய்துள்ளார். அதாவது சாலை கிராமம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஜான் பிரிட்டோ ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது..

