India oi-Vignesh Selvaraj
Updated: Wednesday, July 5, 2023, 12:06 [IST]
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி இரு அணிகளாகப் பிளவு பட்டு, அஜித் பவார் பாஜக – ஷிண்டே சிவசேனா கூட்டணி அரசில் துணை முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் இன்று சரத் பவார், அஜித் பவார் இருவருமே கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவசேனா- பாஜக கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் துணை முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 53 பேரில் 40-க்கும் மேற்பட்டவர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக அஜித் பவார் தெரிவித்தார். அஜித் பவாரின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக கூறிய சரத்பவார் கட்சி கொள்கைகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சத்தாரா சுற்றுப்பயணத்தில் இருந்து மும்பை திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அஜித் பவார் தலைமையிலான அணிக்கு 13 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக்கு மேல் இல்லை என்றும் எனவே அஜித் பவாருடன் சென்ற எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் விதிகளை பயன்படுத்தவும் சரத் பவார் தரப்பு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அமைச்சர்களாக பதவி ஏற்ற அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி தேசியவாத காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து சபாநாயகருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆலோசனைக் கூட்டத்திற்கு கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் ஒய்.பி சவான் அரங்கில் நடைபெற உள்ளது. அதேசமயம், மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.பி. எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், மாநில – மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் பந்த்ராவில் பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. இன்று சரத் பவார், அஜித் பவார் என இரு தரப்பும் ஒரே நாளில், அதுவும் 2 மணி நேர இடைவெளியில் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதன் மூலம் சரத் பவார் மற்றும் அஜித் பவார் இருவருக்கும் உண்மையிலேயே இருக்கும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறித்த தெளிவான விவரம் இன்று தெரியவரும் என்பதால் மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
While the Sharad Pawar group has called a meet of MLAs and party functionaries at 11 am at YB Chavan Centre at Nariman Point, deputy CM Ajit Pawar has summoned all the legislators at 1 pm to the Mumbai Education Trust in Bandra.

