கேரள மாநிலத்தின் அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் பல்வேறு வகையான உணவு வகைகள், பூக்கோலம் ஆகியவற்றுடன் ஓணத்தை பிரம்மாண்டமான வகையில் கொண்டாடுகின்றனர். 10 நாள்கள் நீடிக்கும் இந்த கொண்டாட்டத்தில் இன்றைய நாள் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. அதாவது, இன்றைய நாள் திருவோணம் என்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, கேரள மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், நடிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களும் இன்று தங்கள் ஓணம் கொண்டாட்டத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றி, தங்களின் வாழ்த்துகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். கேரளாவில் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் பண்டியாக ஓணம் உள்ளது.
கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட இடங்களிலும் இன்று ஓணம் கொண்டாட்டம் அதிகமாக காணப்படும். இருப்பினும், ஓணம் கொண்டாட்டத்தின் வீச்சு தற்போதைய காலகட்டத்தில் அதிகமாகியுள்ளதால், கேரள மக்கள் சிறு எண்ணிக்கையில் இருந்தாலும் அங்கும் பெரிய அளவில் ஓணம் கொண்டாடப்பட்டு வருவது, கேரளா – தமிழ்நாட்டின் இணக்கத்தை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது எனலாம்.
அந்த வகையில், ஓணம் பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் இருந்தாலும், கேரள மக்கள் அதில் தனித்த இடத்தை பிடிப்பார்கள் எனலாம். எனவே, அவர்களின் கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, ஓணத்திற்கு உள்ளூர் விடுமுறையை சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். சென்னையில் மட்டுமின்றி கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி, வங்கி, அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் இங்கு இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு – கேரளா பிணைப்பு இப்படி இருக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஓணத்திற்கு மலையாளத்திலேயே பேசி வீடியோவில் வாழ்த்து தெரிவித்தது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார். மேலும், அதில் மலையாளத்திலேயே கேப்ஷனும் வைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. அதில்,”நாம் பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக மாறி அனைவரையும் சமமாகப் பார்ப்போமாக. பூக்கள், விருந்துகள் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த வீடியோவில்,”மாவேலியோடு நாடு போல் ஒற்றுமையும், சமத்துவமும் மீண்டும் உண்டாக வேண்டும். எல்லாரையும் ஒன்றாக காணும் ஒன்றிய அரசு வரும். நாம் ஒற்றுமையாக நிற்போம். என் பிரியப்பட்ட மலையாளிகளுக்கு மனமார்ந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள்” என அந்த வீடிோயவில் முதலமைச்சர் ஸ்டாலின் மலையாளத்திலேயே பேசியுள்ளார்.

