“திருப்பூர் மாவட்டக் கனிமவளத்துறை உதவி இயக்குநராகப் பணியாற்றிய வள்ளல், தனது அலுவலகத்தில் கோமதி என்ற பெண்ணைப் பணிக்கு அமர்த்தியிருக்கிறார். இது அரசு விதிகளுக்குப் புறம்பானது. மேலும், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள், அமைச்சர், ஆட்சியரின் ஆய்வுக்கூட்டங்கள் எதிலும் கலந்துகொண்டதில்லை.
வள்ளலின் செயல்பாட்டால், மக்கள் மத்தியில் மாவட்ட நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெற அவருக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும், வள்ளல் விளக்கமளிக்கவில்லை. எனவே, தமிழ்நாடு குடிமைப் பணி விதி 17(a)-ன் கீழ், வள்ளலை மே 17 முதல் உதவி இயக்குநர் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிடுகிறேன்” என திருப்பூர் ஆட்சியராக இருந்த வினீத் அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.
ஆட்சியர் வினீத் பணியிட மாற்றம் செய்யப்பட்ட கடைசி நாளில், கனிமவளத்துறை உதவி இயக்குநர் வள்ளல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர், இயற்கை ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்த நிலையில் வள்ளலை, திருப்பூர் மாவட்டக் கனிம வளத்துறை உதவி இயக்குநராக மீண்டும் நியமித்து, கனிம வளத்துறை ஆணையர் ஜெயகாந்தன் உத்தரவிட்டிருக்கிறார். அவர் பிறப்பித்த உத்தரவில், “தமிழ்நாடு புவியியல் மற்றும் கனிம வளத்துறை சிறப்பு விதிகள்படி, உதவி இயக்குநர் பதவியில் ஆட்களை நியமிப்பது, பணியிட மாற்றம் செய்வது, அவர்களுக்கு விடுமுறை அளிப்பது ஆகியவை கனிம வளத்துறை ஆணையரின் கட்டுப்பாட்டின்கீழ் வருகின்றன.
கனிம வளத்துறை ஆணையர் உத்தரவின்பேரில்தான் அந்தத் துறையைச் சார்ந்த உதவி இயக்குநரை பணியிலிருந்து மாவட்ட ஆட்சியர் விடுவிக்க முடியும். அதன்படி, திருப்பூர் மாவட்டக் கனிம வளத்துறை உதவி இயக்குநர் வள்ளலை பணியிட மாற்றம் செய்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், ஆட்சியராக இருந்த வினீத் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின்னர்தான், வள்ளலைப் பணியிலிருந்து விடுவிப்பதற்கான உத்தரவை அவர் பிறப்பித்திருக்கிறார். எனவே, வள்ளலை பணியிலிருந்து விடுவிப்பதற்காக வினீத் பிறப்பித்த உத்தரவு ரத்துசெய்யப்பட்டு, அவர் மீண்டும் திருப்பூர் மாவட்டக் கனிம வளத்துறை உதவி இயக்குநராக நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

