
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், 2016 சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றிபெற்றது செல்லும் என அறிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தலில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளில் பாண்டியராஜன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆவடி நாசர் 2016-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் இரண்டு நாட்கள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.

