India oi-Jeyalakshmi C
Published: Saturday, June 17, 2023, 9:09 [IST]
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், லெபனான், சிரியாவை போன்ற சூழல் இங்கு உருவாகியுள்ளதாக முன்னாள் ராணுவ அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் முக்கியமானது மணிப்பூர் மாநிலமாகும். இந்த மாநிலத்தில் சமவெளி பகுதிகளை விட மலை பகுதிகள் அதிகமாக இருக்கின்றன. அதற்கேற்பவாறு பழங்குடியின மக்களும் காலங்காலமாக இங்கு வசித்து வருகின்றனர். அதேபோல சமவெளி அல்லாத பகுதிகளில் மைத்தேயி மெய்டெய் எனப்படும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் பெரும்பான்மையினராக வசித்து வருகின்றனர். மைத்தேயி மக்கள் தங்களையும் பழங்குடியின சமூகத்தினராக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இவர்கள் 53 சதவிகிதம் இருக்கின்றனர். மட்டுமல்லாது சட்டமன்றங்களிலும் இவர்கள்தான் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலின்போது இவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இந்நிலையில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு மைத்தேயி சமூகத்தினர் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக அழுத்தம் கொடுத்திருக்கின்றனர். ஆனால் பாஜக தொடர்ந்து மவுனம் காத்து வந்தது. இதனையடுத்து மைத்தேயி மக்கள் நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மைத்தேயி சமூகத்தினரின் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 19ம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு பழங்குடியினர் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காலங்காலமாக இந்த மலையோடு வாழ்ந்து வரும் எங்களுக்கு கொடுக்கும் அத்துனை சலுகைகளையும் பழங்குடியினர் அல்லாதோருக்கு கொடுப்பது ஏற்புடையது அல்ல என்று கூறினர். இது ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதலாக வெடித்தது. கடந்த மே மாதம் 3ஆம் தேதி தொடங்கிய இந்த மோதலில் தற்போது வரை 105 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள், நிறுவனங்கள், வாகனங்கள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன. வன்முறையில் பாதிக்கப்பட்ட சுமார் 50 ஆயிரம் பேர், 349 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வன்முறை மேலும் பரவாமல் தடுக்க 11 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணுவம் என 20 ஆயிரம் பேர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். மட்டுமல்லாது மத்திய உள்துறை அமைச்சர் அமிதம்ஷாவும் அங்குதான் இருக்கிறார். இருப்பினும் வன்முறைகள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளான லிபியா, லெபனான், சிரியா போன்று மணிப்பூர் மாறியுள்ளதாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். ஓய்வு பெற்ற இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் நிஷிகாந்த சிங், “நான் மணிப்பூரை சேர்ந்த சாதாரண இந்தியன்தான். தற்போது ஓய்வு பெற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். மாநிலத்தின் நிலை இப்போது மிகவும் மோசமானதாக இருக்கிறது. லிபியா, லெபனான், நைஜீரியா, சிரியா போன்ற நாடுகளில் நிலவும் அசாதாரண சூழல் போல இங்கும் நிலவுகிறது. யார் எப்போது உயிரையும், உடைமைகளையும் அழிப்பார்கள் என்று தெரியாத நிலை இருக்கிறது” என்று டிவிட்டரில் கூறியுள்ளார். ராணுவத்தில் சுமார் 40 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்த ராணுவ அதிகாரியின் இந்த ட்வீட்டை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ள முன்னாள் ராணுவத் தளபதி வேத் பிரகாஷ், “மணிப்பூரில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து உயர் மட்டம் அவசர கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். மணிப்பூர் நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் இதுவரை விமர்சித்து வந்த நிலையில், தற்போது முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
As the violence continues in Manipur state, a situation similar to Lebanon and Syria has developed here, a former army officer has alleged.
Story first published: Saturday, June 17, 2023, 9:09 [IST]

