மானாமதுரை அருகே காலை உணவு திட்டத்திற்காக சமைக்கப்பட்ட உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் அதனைச் சமைத்த சமையலருக்கு எம்எல்ஏ தமிழரசி டோஸ் விட்டார்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருக்குவளையில் தொடங்கி வைத்தார். மாநிலத்தில் உள்ள மற்ற ஊர்களில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள ஆலம்பச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத் விரிவாக்கத்தை தொடங்கி வைக்க மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி வந்திருந்தார். அங்கு பள்ளியின் சமயலறைக்குள் திடீரென நுழைந்த அங்கு தயாராகிக் கொண்டிருந்த உணவை சுவைத்துப் பார்த்தார்.
அப்போது உப்புமாவில் உப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்தார். பின்னர் சாம்பாரை சோதித்து பார்த்த போது அது அதிக தண்ணீராக இருப்பதைக் கண்டார். இதையடுத்து சமையலருக்கு டோஸ் விட்டார். இதனால் பதறிப்போன அந்த சமையலர், முதல் நாள் என்பதால் தவறு நேர்ந்ததாகவும், இனி சரியாக சமைப்பதாகவும் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவினை எம்எல்ஏ தமிழரசி சாப்பிட்டார். அப்போது அங்கு வந்திருந்த ஒரு வயது குழந்தையை தனது மடியில் அமர வைத்து அந்த குழந்தைக்கும் உணவினை ஊட்டி விட்டார்.

