பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபால் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது, இடைய புதூர் பேருந்து நிறுத்தம் அருகே இருவர் நின்று கொண்டிருந்திருக்கின்றனர். அவர்களது நடவடிக்கைகள் சந்தேகத்துக்கிடமான முறையில் இருந்ததையடுத்து, அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், ஒருவர் சிங்கம்புணரியைச் சேர்ந்த சக்தி என்பதும், மற்றொருவர் தேவக்கோட்டையைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், சிகப்பி, பழனியப்பன் கொலையில் இருவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.
சக்தி, பழனியப்பனிடம் கொத்தனாராக பணிபுரிந்து வந்திருக்கிறார். பணியிலிருந்து விலகிய நிலையில், நகைக்காக பழனியப்பன், சிகப்பி ஆகியோரை திட்டமிட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, இருவரிடமிருந்து தோடு, மோதிரம் உள்ளிட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன. இருவரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களைச் சிறையில் அடைத்தனர்.
இருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து அந்த கிராம மக்கள் பீதியிலிருந்த நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்த காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவை கிராமமக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்த போலீஸாரை, அண்மையில் வந்திதா பாண்டே ஐ.பி.எஸ் நேரில் வரவழைத்து வெகுமதிகள் வழங்கிப் பாராட்டினார். இந்த நிலையில், வழக்கை சிறப்பாகக் கையாண்ட புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே தலைமையிலான போலீஸ் டீமை, தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

