இன்று சென்னை கிண்டியில் ரூ.230 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டிருக்கும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அப்போது கலைஞர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்தவர், “இந்த மருத்துவமனை 15 மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்டிருப்பதே பெரிய சாதனை. 2015-ம் ஆண்டு தொடங்கி 2023-ம் ஆண்டு ஆகிய பின்னரும்கூட, சிலர் இரண்டாவது செங்கலைக்கூட எடுத்து வைக்காமல் அலட்சியத்தோடு இருக்கிறார்கள்.




முதல் செங்கல் கதை உங்களுக்குத் தெரியும் . அவர்தான்(உதயநிதி ஸ்டாலின்) முன்னாடி உட்கார்ந்திருக்கிறார். ஆனால், கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்ததாகக் கட்டப்பட்டிருக்கிறது.
ஏழை மக்களுக்காகப் பல திட்டங்களை அறிமுகம் செய்தவர் கலைஞர். அவர் ஏழை மக்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்துக்கு மற்றொரு சான்றாக ஒரு நிகழ்வைப் பதிவுசெய்கிறேன். 1975-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் கலைஞர் வாழக்கை சுயசரிதையான ’நெஞ்சுக்கு நீதி’ முதல் பாகத்தின் வெளியீட்டு விழா கலைவாணர் அரங்கில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதின் அலி அகமது கலந்துகொண்டு வெளியிட ஒப்புக்கொண்டிருந்தார். அந்த நூலைப் பெற்றுக்கொள்ள தமிழ்நாடு ஆளுநர் கே.கே.ஷா வருவதாகவும் இருந்தது. கடைசி நேரத்தில் இப்போது நடந்திருப்பதுபோல, அப்போதும் குடியரசுத் தலைவரை வரவிடாமல் சிலர் தடுத்துவிட்டார்கள்.

அதைப்பற்றி கவலைப்படாமல் கலைஞர், நெஞ்சுக்கு நீதி வெளியிட்டைக் கண் ஒளியற்றவரும், தமிழ்நாடு விழியிழந்தோர் சங்கத் தலைவருமான ஆசிர் நல்லதம்பியைத் தலைமை தாங்கவைத்தார். தொழு நோய் மறுவாழ்வு சங்கத்தின் பொதுச்செயலாளர் கவிஞர் முகமது அலி நூலை வெளியிட்டார். அதை மாற்றுத்திறனாளியான சாந்தகுமாரி பெற்றுக்கொண்டார்.
இவ்வாறு ஏழையின் பங்காளராக கலைஞர் இருந்தார். குடியரசுத் தலைவர் வரவில்லையே என்பதைக் குறிப்பிட்டு, `என் வாழ்க்கையில் மகிழ்ச்சி 24 மணிநேரம் நீடித்ததில்லையே…’ என பல்வேறு சோதனைகளைக் கடந்துதான் அவரும் வளர்ந்தார். இப்போது நாமும் வளர்ந்து கொண்டு வருகிறோம்” என்றார்.

