சூப்பர் ஓய்வூதியத் திட்டம்: நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருகிறது. மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப இந்த திட்டங்களில் தங்களுக்கான திட்டத்தை தேர்வு செய்கிறார்கள். பொதுவாக அலுவலக பணிகளில் இருப்பவர்கள் பணி ஓய்வு குறித்து கவலையில் இருப்பதுண்டு. ஓய்வுக்கு பிறகு ஏற்படக்கூடிய நிதி நெருக்கடி அவர்களை அச்சுறுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில், மக்களுக்கு உதவும் வகையில் ஓய்வூதிய திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் மக்கள் ஓய்வூதியமாக மாதம் 5,000 ரூபாய் பெறலாம். இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
அரசு 2015-ம் ஆண்டு அடல் ஓய்வூதியத் திட்டத்தைத் (Atal Pension Scheme) தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்வதன் மூலம், கணக்கு வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு ரூ.60,000 அதாவது மாத ஓய்வூதியம் ரூ.5,000 பெறலாம். இந்தத் திட்டத்தின் விவரங்கள் மற்றும் தகுதி பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
அடல் பென்ஷன் திட்டம் என்றால் என்ன
மோடி அரசாங்கம் 2015 இல் அடல் பென்ஷன் யோஜனாவைத் தொடங்கியது. 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைத்து குடிமக்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம். இருப்பினும், அக்டோபர் 1, 2022 -க்குப் பிறகு, வருமான வரி செலுத்தாதவர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதி வந்தது. இத்திட்டத்தின் கீழ், சந்தாதாரர் 60 வயதை அடைந்த பிறகு அவரது பங்களிப்பைப் பொறுத்து மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையிலான ஓய்வூதிய உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. சந்தாதாரர் இறந்தால், இந்த ஓய்வூதியத் தொகை அவரது மனைவிக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்
அடல் பென்ஷன் யோஜனா, குறைந்த பணத்தை முதலீடு செய்து ஓய்வூதியத்திற்கான உத்தரவாதத்தை பெறும் ஒரு மிக நல்ல திட்டமாகும். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான பங்களிப்பை கணக்கில் செலுத்தினால், ஓய்வுக்குப் பிறகு, ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறப்படும்.
தற்போதைய விதிகளின்படி, 18 வயதில், மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5,000 சேர்த்தால், ஒவ்வொரு மாதமும் ரூ. 210 செலுத்த வேண்டும். இந்த பணத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொடுத்தால், 626 ரூபாயும், ஆறு மாதத்தில் கொடுத்தால், 1,239 ரூபாயும் செலுத்த வேண்டும். மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் பெற 18 வயதில் முதலீடு செய்தால், மாதம் ரூ.42 செலுத்த வேண்டும்.
வரி விலக்கின் பலனையும் பெறுவீர்கள்
5 ஆயிரம் ஓய்வூதியம் (Pension) பெற 35 வயதில் சேர்ந்தால், 25 ஆண்டுகளுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை 5,323 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த வகையில், உங்களின் மொத்த முதலீடு ரூ.2.66 லட்சமாக இருக்கும், அதில் உங்களுக்கு ரூ. 5,000 மாத ஓய்வூதியம் கிடைக்கும். 18 வயதில் சேர்ந்தால், உங்களின் மொத்த முதலீடு ரூ.1.04 லட்சம் மட்டுமே இருக்கும். அதாவது, அதே ஓய்வூதியத்திற்கு, சுமார் 1.60 லட்சம் ரூபாய் அதிகமாக முதலீடு செய்ய வேண்டி வரும். வருமான வரியின் 80CCD பிரிவின் கீழ், இது வரி விலக்கின் பலனைப் பெறுகிறது.
PFRDA
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளையின் இணையதளத்தை புதிய மேம்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் சில புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் தொடர்புடைய உறுப்பினர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த இணையதளத்தை PFRDA தலைவர் டாக்டர் தீபக் மொஹந்தி தொடங்கி வைத்தார்.
PFRDA படி, ஓய்வூதிய முறையை மேலும் வலுப்படுத்த இணையதளத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் நோக்கம் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APY) தொடர்பான தகவல்களை அனைத்து உறுப்பினர்களுக்கும் தடையின்றி வழங்குவதாகும்.

