நடிகரும் பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி.சேகர், சமீபகாலமாக பா.ஜ.க தமிழகத் தலைமையுடன் மோதல்போக்கைக் கடைபிடித்து வருகிறார். அண்மையில் இவருக்கும் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தைப்போர் நடந்தது என்றே சொல்லலாம். `அவர் ஒன்றுமே இல்லை. அரசியலில் அனாதையாகத்தான் நிற்பார். பா.ஜ.க-வில் இருக்கும் பிராமணர்களை ஒடுக்க வேண்டுமென்பதையே குறிக்கோளாகக் கொண்டு அண்ணாமலை செயல்படுகிறார்’ என்று எஸ்.வி.சேகர் சாடிவந்தார். பதிலுக்கு அண்ணாமலையும் இவரைச் சாடியிருந்தார்.

இந்த நிலையில், விரைவில் பிராமணர்களுக்கென்று தனி அரசியல் கட்சி உருவாகவிருப்பதாகவும், 33 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவிருப்பதாகவும் எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.வி.சேகர் இதுபற்றி பேசுகையில், “தமிழ்நாட்டில் விரைவில் பிராமணர்களுக்கென்று ஒரு கட்சி உருவாகிறது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டது.
2024 தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 33 தொகுதிகளில் பிராமண வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். பிராமண வாக்காளர்கள் மட்டும் வாக்களித்தால்போதும். தமிழ்நாட்டில் பிராமணர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து அரசாங்கத்திடம் தகவல் இல்லை. ஆனால் 48 லட்சம் பிராமணர்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதில் 30 லட்சம் பேர் ஓட்டுப் போடாமல் மீதி இருப்பவர்கள் இந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டால் போதும்.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வெற்றியைத் தீர்மானிப்பதில் ஒன்றை லட்சத்திலிருந்து மூன்று லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம். அப்படி என்றால் பத்து லட்சம் வாக்குகள் இந்தக் கட்சிக்கு இருக்கிறது. 2026-ல் என்னுடைய சமூகத்தின் குரலைச் சட்டமன்றத்தில் ஒலிக்க வைப்பதற்கான முயற்சிதான் இது. இது எந்த சமூகத்துக்கும் எதிரானது கிடையாது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா என எல்லா இடங்களிலும் பிராமணர்கள் நலவாரியம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. புதிதாக உருவாகும் இந்தக் கட்சிக்கு நான் தலைமை தாங்க வேண்டும் என்று அவர்கள் விருப்பப்பட்டால், மோடியிடம் கூறிவிட்டு பா.ஜ.க-விலிருந்து விலகிவிடுவேன்” என்றார்.

