ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவி வகித்த 1991-96 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பெயரில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, பின்னர் பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடக்கவே, 2017-ல் வழக்கு முடிவுக்கு வந்தது. ஜெயலலிதா அப்போது உயிரோடு இல்லாததால் மற்ற மூவரும் சிறைக்குச் செல்ல நேரிட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தொடர்புடைய தங்க நகைகள் உட்பட பல்வேறு உடைமைகள் பெங்களூரு நீதிமன்றத்தால் கைப்பற்றப்பட்டன. முன்னதாக, 1996 டிசம்பர் 11-ம் தேதியே போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து தங்கம், வைரம் உள்ளிட்ட பல்வேறு விலையுயர்ந்த பொருள்களை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தது. வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டதால் ஜெயலலிதாவின் உடைமைகளும் பெங்களூரு நீதிமன்றத்துக்கு கைமாற்றப்பட்டதாகக் கருதப்பட்டன.
இந்த நிலையில், கர்நாடக அரசு வசம் இருக்கிற ஜெயலலிதாவின் பொருள்களை ஏலம்விட்டு அதில் கிடைக்கும் பணத்தை, கர்நாடக அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர்.
அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பொருள்களை ஏலம்விட வழக்கறிஞர் ஒருவரை நியமித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதற்கிடையில், கைப்பற்றப்பட்ட பொருள்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கைப்பற்றப்பட்ட பொருள்களில் புடவைகளின் எண்ணிக்கை மட்டும் 11 ஆயிரத்து 344 என்றும், காலணிகள் 750 என்றும் தெரிகிறது. இதைத் தாண்டி ஏசி, தொலைபேசி, கட்டில்கள் போன்ற பல பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஏலம்விடக் கோரிய மனுமீதான விசாரணை கடந்த வாரம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கவே, “ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் பட்டியலில் மொத்தம் 29 பொருள்கள் இருக்கின்றன. ஆனால், வரிசை எண் 28-லுள்ள 30 கிலோ தங்கம், வைரம் உள்ளிட்ட பொருள்கள் மட்டுமே நீதிமன்றம் வசமிருக்கிறது மற்ற பொருள்கள் இல்லை” எனத் தெரிவிக்க வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதன்படி, `விலை உயர்ந்த கடிகாரம், 11,000 புடவைகள், பரிசுப் பொருள்கள் உட்பட, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்த 28 பொருள்களை, கர்நாடக கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்’ எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருள்கள் ஏலம் விடப்படுமா… அல்லது குடும்பத்தினராகக் கருதக்கூடிய தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்கப்படுமா என்பது அடுத்தகட்ட விசாரணையில் தெரியவரும். இந்த வழக்கு ஜூலை 12-ம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

