
சேலம்: மக்களவைத் தேர்தல் குறித்து பாஜகவுக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதில், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா கூறியது: ”நாட்டின் சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது போல பேசியிருக்கிறார். பாஜகவின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் நாடு நிலைகுலைந்துள்ளது. ஆனால், 3-வது முறையாக தான் பிரதமராக வந்தால், நாடு பொருளாதார பலமிக்க மிக்க நாடாகும் என்று பிரதமர் பேசுகிறார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவோம், கருப்புப் பணத்தை மீட்டு மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை.

