தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்(53). இவர் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த ஏப்ரல் 25-ம் தேதி தனது அலுவலகத்தில் இருந்த லூர்து பிரான்சிஸ், வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாமிரபரணி ஆற்றில் கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன்(41), மாரிமுத்து(35) ஆகியோர் மணல் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக, முறப்பநாடு காவல் நிலையத்தில் லூர்து பிரான்சிஸ் புகார் அளித்துள்ளார். அந்த முன்விரோதத்தில் கொலை நடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் நீதிபதி என்.செல்வம் முன்னிலையில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அரசு ஊழியர்கள் வரவேற்பு: இதில், குற்றம் சாட்டப்பட்ட ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோருக்கு அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததற்கு 5 ஆண்டுகள், ரூ.1,000 அபராதம், கொலை செய்ததற்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை நடந்த 5 மாதங்களுக்குள் விசாரணையைத் துரிதப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியிருப்பது, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


காவல்துறையின் விசாரணை அதிகாரியின் செயல் பாராட்டப்பட வேண்டியது காவல்துறையும் நீதி துறையும் இணைந்து செயல்பட்டதால் தான் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது தீர்ப்பை வரவேற்கிறேன்