புதுவை கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த பெண் தவமணி. இவர் தன்னுடைய அண்ணன் மாசிலாமணி மற்றும் குடும்பத்தினருடன் இன்று காலை புதுச்சேரி சட்டசபைக்கு வந்திருந்தார். சட்டசபைக் காவலர்களிடம் முதலமைச்சர் ரங்கசாமியைக் காண வேண்டும் எனக் கூறி, சட்டசபை வளாகத்துக்குள் வந்து காத்திருந்தார்.
சுமார் 12:15 மணியளவில் முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்துக்கு காரில் வந்தார். அவரை வரவேற்க அலுவலக ஊழியர்கள் காத்திருந்தனர். அப்போது காரிலிருந்து இறங்கிய முதல்வர் ரங்கசாமி, சட்டசபை படிக்கட்டுகளில் ஏற முயன்றார். அப்போது தவமணி ஓடிச் சென்று முதலமைச்சரின் காலைப் பிடித்துக்கொண்டார். அப்போது, தங்கள் பிரச்னைக்கு முதலமைச்சர்தான் தீர்வு காண வேண்டும் என்று கதறியழுதார்.

தொடர்ந்து, “கோர்க்காட்டில் எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் நெல் பயிர் செய்திருந்தோம். தற்போது வக்கீல் ஒருவர் போலிப் பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரித்துக்கொண்டார். அத்துடன் அதில் பயிர் செய்திருந்த நெல்லையும் அறுவடை செய்துவிட்டார். இது குறித்து போலீஸாரிடம் புகார் கொடுத்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள்தான் கருணை காட்டி எங்களுக்கு உதவிசெய்ய வேண்டும்.
அந்த நிலத்தை நம்பித்தான் எங்களின் குடும்பம் இருக்கிறது. எங்களின் வாழ்வாதாரமே அதுதான். அந்த நிலம் இல்லையென்றால் எங்களுக்கு வாழ்க்கையே இல்லை” என்று கதறியழுதார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த தவமணியின் அண்ணன் மாசிலாமணி, பிளாஸ்டிக் பாட்டிலில் தான் மறைத்துவைத்திருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டினார்.
அப்போது அவர் ஊற்றிக்கொண்ட பெட்ரோல் முதல்வர் முதலமைச்சர் ரங்கசாமியின் காலிலும் தெறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அதை க்கண்டு அதிர்ச்சியடைந்த முதல்வர் ரங்கசாமியின் பாதுகாவலர்களும், சட்டசபைக் காவலர்களும் உடனடியாக அவர்கள் இருவரையும் முதலமைச்சர் ரங்கசாமியிடமிருந்து அகற்றினர். இந்தச் சம்பவத்தைச் சற்றும் எதிர்பாராத முதல்வர் ரங்கசாமி, நில ஆக்கிரமிப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுவிட்டு, தனது அலுவலகத்துக்குள் சென்றார். அதையடுத்து சட்டசபைக் காவலர்கள் பெரிய கடை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த பெரிய கடை போலீஸார் தவமணி, மாசிலாமணி இருவர்மீதும் தண்ணீர் ஊற்றினர்.

அதன்பிறகு அவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் நில அபகரிப்பு குறித்து வில்லியனூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியதுடன், அவர்களை போலீஸ் வாகனத்திலேயே வில்லியனூருக்கு அனுப்பிவைத்தனர். புதுவை சட்டசபையைப் பொறுத்தவரை பொதுமக்கள் எளிதாக வந்து செல்வது வழக்கமான ஒன்றுதான். ஆனாலும் சட்டபை வளாகத்துக்குள் ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் எடுத்துவரும் வரை, சட்டசபைக் காவலர்கள் அஜாக்கிரதையாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் இது குறித்து துறைரீதியிலான விசாரணை நடத்தவும் சட்டசபைச் செயலர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதையடுத்து தன்மீது பெட்ரோல் பட்டதால் முதலமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் சட்டையை மாற்றிக்கொண்டார்.

