கலைஞரிடம் 21 வயதில் உதவியாளராக வந்தவர், அவரைக் கவனிப்பதற்காக திருமணமே செய்துகொள்ளவில்லை. தாயை இழந்த குட்டிபோல் தவித்துக்கொண்டிருக்கும் நித்யாவிடம் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி பேசினேன்.
“அப்பா கழக உறுப்பினர் என்பதால் இயல்பிலேயே எனக்கும் தி.மு.க மீது பற்று அதிகம். தேர்தல் பணிகளுக்காக பேராசிரியரிடம் மூன்றுமாதம் இருந்தேன். அந்த அறிமுகம்தான் கலைஞர் ஐயாவிடம் பணிபுரிய என்னைப் பரிந்துரை செய்யவைத்தது. முதல்ல நேரடி உதவியாளரா சேர்ந்து 2006-ஆம் ஆண்டு முதல் தனி உதவியாளரா மாறினேன். அதிலிருந்து, ஐயாவின் கடைசி காலம் வரை கூடவே இருந்து பார்த்துக்கிட்டேன். ஐயாகிட்ட வேலைக்கு சேர்ந்த முதல்நாளே காலுக்கு ஷூ மாட்டிவிட்டேன். ‘நீ படிச்ச படிப்புக்கு இப்படியெல்லாம் பண்ணக்கூடாது. உன்னை பெத்தவங்கப் பார்த்தா எவ்ளோ கஷ்டப்படுவாங்க’ ன்னு சொல்லி தவிர்த்துட்டார். இப்படி, எனக்கு முதல்நாளே மறக்க முடியாததாய் அமைந்தது.
வேலைக்கு சேர்ந்த புதுசுல காலைல 6.30 மணிக்கு வந்துட்டு, நைட்டு 9.30 க்குத்தான் வீட்டுக்குப் போவேன். ஒருதடவை காலையில லேட்டா வந்துட்டேன். ஐயா கதவைத் திறக்கவே இல்ல. அப்புறமா, போய் மன்னிப்புக் கேட்டேன். ‘போடா… போ எனக்கு யாரும் வேணாம்’ன்னு அன்பா கோவிச்சுக்கிட்டார். முதல்தடவையா என்கிட்ட கோவப்பட்டது அப்போதான். அதிலருந்து, அவரைப் புரிஞ்சிக்கிட்டு தாமதமா போனதே இல்ல.

