பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக, டசால்ட் ஏவியேஷன் இந்தியாவில் செலுத்தியதாகக் கூறப்படும் பணம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பாரிஸ் மாஜிஸ்திரேட்டுகள் இந்திய அரசுக்கு அதிகாரப்பூர்வ கோரிக்கையை அனுப்பியுள்ளதாக பிரெஞ்சு செய்தி இணையதளமான மீடியாபார்ட் தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தைப் பாதுகாக்கும் முயற்சியில், டசால்ட் நிறுவனம் பல மில்லியன் யூரோக்களை இந்தியாவைச் சேர்ந்த வணிக இடைத்தரகர் சுஷேன் குப்தாவுக்கு ரகசியமாகச் செலுத்தியதற்கான விரிவான ஆதாரங்களை மீடியாபார்ட் முன்பு வெளிப்படுத்திய இரண்டு இந்திய விசாரணைகளின் வழக்குக் கோப்புகளை ஆய்வு செய்வதில் நீதிபதிகள் குறிப்பாக ஆர்வமாக உள்ளனர் என்று யான் பிலிப் எழுதிய அறிக்கை கூறுகிறது.


இந்தியாவின் பதில் என்னவாக இருக்கும் என்பது உடனடியாகத் தெரியவில்லை. பொதுவாக இந்த வகையான கோரிக்கைகள் வெளிவிவகார அமைச்சகம் மூலம் அனுப்பப்பட்டு, இந்தியாவில் உள்ள சம்பந்தப்பட்ட துறையால் முடிவு எடுக்கப்படும். இந்த விஷயத்தில் பெரும்பாலும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DOPT) மற்றும் நிதி அமைச்சகமே பதில் கூறும் கடமை உள்ளது.
குப்தா தற்போது VVIP ஹெலிகாப்டர் ஊழலில் ED இன் பணமோசடி விசாரணைக்கு உட்பட்டுள்ளார். 2021 இல் மீடியாபார்ட் வெளியிட்ட அறிக்கைகள், 15 வருட காலப்பகுதியில் டசால்ட் மற்றும் தேல்ஸுடன் குப்தாவின் ஆழமான வணிகத் தொடர்புகளை அம்பலப்படுத்தியது. மீடியாபார்ட், பிரெஞ்சு பொருளாதார மந்திரி (தற்போதைய ஜனாதிபதி) இம்மானுவேல் மக்ரோன் மற்றும் நிதி மந்திரி மைக்கேல் சபின் ஆகியோருக்கு அம்பானி €151 மில்லியன் வரி கட்டணத்தை குறைக்க அவர்களின் தனிப்பட்ட தலையீட்டை கோரி கடிதம் எழுதியுள்ளதை வெளிக்கொணர்ந்துள்ளது. இறுதியில் அனில் அம்பானியிடம் அந்த வரி தொகை மிகவும் குறைக்கப்பட்டு €151 மில்லியனில் இருந்து € 6.6 மில்லியனாக செலுத்துமாறு கேட்கப்பட்டது, என்று அந்த அறிக்கை கூறுகிறது. மீடியாபார்ட் அறிக்கையின்படி, ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் 2015-ம் ஆண்டு செயல்பட்டதால், அனில் அம்பானியின் ஃபிளாக் அட்லாண்டிக் பிரான்ஸுக்கு 144 மில்லியன் யூரோ வரிக் குறைப்பு வழங்கப்பட்டது. ஏப்ரல் 14, 2015 அன்று அமைச்சர்கள் சபின் மற்றும் மக்ரோனுக்கு அவர் கடிதம் எழுதியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு பிரான்சில் மோடியுடன் அம்பானி இருந்தார், அப்போது பிரதமர் மோடியுடன் 126 ரஃபேல் விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, 36 விமானங்களை பிரெஞ்சு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து நேரடியாக வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடிவு செய்தார். மீடியாபார்ட் பிரான்சின் வரி நிர்வாகத்தின் உதவியோடு சேகரிக்கப்பட்ட ரகசிய ஆவணங்களில் அம்பானியின் கடிதத்திற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தது. 2016-ம் ஆண்டு இந்தியாவுக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை விற்பனை செய்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரான்ஸ் நீதித்துறை விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கம் தற்போது இவற்றில் சேர்க்கப்பட்டுள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன. ரஃபேலின் பங்குதாரராக அம்பானி ஒப்பந்தத்தில் கொண்டு வரப்பட்டார், ஏனென்றால் மோடி அரசாங்கம் அதைத்தான் வலியுறுத்தியது என்று முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டே 2018 பேட்டியில் வெளிப்படுத்தினார். அனால் டசால்ட் ஏவியேஷன் மற்றும் ரிலையன்ஸ் இதை மறுத்துள்ளன. மேலும் பிரெஞ்சு நிறுவனம் எடுத்த ‘வணிக முடிவு’ குறித்து இந்திய அரசு எந்த கருத்தும் இல்லை என்று அப்போது தெரிவித்தது. இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட மறுத்துவிட்டது, ஆனால் இந்த ஒப்பந்தம் பிரான்சில் தற்போதைய குற்றவியல் விசாரணைக்கு உட்பட்டது.

