
புதுச்சேரி: புதுவை அரசில் காலியாக உள்ள 116 மேல்நிலை எழுத்தர் பணிக்கு இன்று தேர்வு நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு மையத்தில் சிலருக்கான தேர்வு அறை முதல்தளத்தில் இருந்ததால், மாற்றுத் திறனாளிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
புதுவை மாநில அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள 116 மேல்நிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. தேர்வுக்காக புதுவையில் 107, காரைக்காலில் 13, மாஹேயில் 5 மற்றும் ஏனாமில் 8 என மொத்தம் 133 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு பணியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தேர்வு அலுவலர்கள் நுழைவு சீட்டுடன் தேர்வர்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு ஆகியவற்றுள் ஒன்றின் அசலை கேட்டுப் பெற்று உறுதி செய்தனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

