திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடியில் டால்மியா சிமென்ட் ஆலை இயங்கி வருகிறது. இங்கு கடந்த 17-ம் தேதி இரவு கல்லக்குடி தி.மு.க., நகரச் செயலாளரும், கல்லக்குடி பேரூராட்சித் தலைவருமான துரை (எ) பால்துரை சென்று பெரும் ரகளை செய்திருக்கிறார். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த பால்துரை, அவரது சகாக்கள் சிலருடன் டால்மியாபுரம் சிமென்ட் ஆலைக்குச் சென்றிருக்கிறார்.

அப்போது நுழைவு வாயிலின் குறுக்கே பைக்கை நிறுத்தி, அங்கேயே சேரைப் போட்டு உட்கார்ந்து ஆபாசமான வார்த்தைகளால் ஆலை நிர்வாகத்தை பேசியிருக்கின்றனர். மேலும், பாதுகாப்பிற்கு இருந்த காவலாளிகளையும் தாக்கிவிட்டு அத்துமீறி சிமென்ட் ஆலை அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததோடு, அங்கிருந்த மேஜை, நாற்காலிகள் மற்றும் கம்ப்யூட்டரை அடித்து நொறுக்கியிருக்கின்றனர்.
இந்த அராஜகத்தையடுத்து, பால்துரை உள்ளிட்ட 3 பேர் மீது டால்மியா சிமென்ட் நிறுவனம் சிசிடிவி காட்சிகளோடு கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் பால்துரை, ஸ்ரீனிவாசன் மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேர் மீது கல்லக்குடி போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். என்ன நடந்ததென விஷயமறிந்த சிலரிடம் பேசினோம். “டால்மியா சிமென்ட் நிறுவனம் சார்பில் லோக்கல் கட்சியினருக்கு என்ன கவனிப்பு செய்ய வேண்டுமோ அதை ரெகுலராக செய்துகொண்டு வந்திருக்கின்றனர்.

ஆனால், பேரூராட்சித் தலைவர் பால்துரை, ‘சிமென்ட் ஆலையில் சில காண்ட்ராக்ட் வேலைகளை எனக்குக் கொடுக்க வேண்டும். நான் சொல்லுகிற ஆட்களுக்கு நிறுவனத்தில் வேலை கொடுக்க வேண்டும்’ என ஏகத்துக்கும் குடைச்சல் கொடுத்து வந்திருக்கிறார். இதனை சிமென்ட் ஆலை நிர்வாகம் பெரிதாக பொருட்படுத்தாமல் இருந்திருக்கின்றனர். இது பால்துரைக்கு கோபத்தை ஏற்படுத்தவே, அங்குச் சென்று ரகளை செய்திருக்கிறார். பால்துரை அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர். அதனால் தான் முதலில் வழக்குப்பதிவு செய்யவே போலீஸார் தயங்கினர்.
ஒரு கட்டத்தில் வழக்குபதிவுசெய்ய, இன்னும் கைது நடவடிக்கையை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். போலீஸார் தான் நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க., தரப்பில் இருந்தாவது பால்துரை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பயமில்லாமல் தி.மு.க.,வினர் தொடர்ந்து இத்தகைய அட்ராசிட்டியை செய்து வருவார்கள். டால்மியா நிறுவனம் சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியிருக்கிறார்கள் என பால்துரை சொல்கிறார். அப்படி டால்மியா நிறுவனம் தவறு செய்திருந்தால், பேரூராட்சி சார்பில் தீர்மானம் போட்டு, நடவடிக்கை எடுத்திருக்கலாமே” என்றனர்.
இது குறித்து பால்துரையிடம் பேசினோம். “சம்பவத்தன்று அந்த சிமென்ட் ஆலை வழியாகச் சென்றேன். அவர்கள் சாலையை ஆக்கிரமித்து கட்டியிருந்த சுவற்றில் மோதி கீழே விழுந்துவிட்டேன். 6 மாதமாக உள்ள அந்த ஆக்கிரமிப்பினால் பலரும் விபத்துக்குள்ளாகி வந்தனர்.

நானும் அதில் பாதிக்கப்பட்டதால், அப்போது ஆலையிலுள்ள அதிகாரிகளை வரச் சொன்னேன். 20 நிமிடமாகியும் அதிகாரிகள் வராததால் உள்ளே சென்றேன். நடந்தது இப்படியிருக்க, அவர்களுக்குத் தேவையான சிசிடிவி புட்டேஜை வைத்து இல்லாத ஒரு கதையைக் கட்டியிருக்கிறார்கள். அங்கிருந்த ஊழியர்கள் யாரையும் நான் அடிக்கவில்லை. அங்கிருக்க ஊழியர்கள் தான் என்னை தள்ளிவிட்டார்கள். மாமூல் கேட்டு அங்கு போய் ஏன் பிரச்னை செய்யப் போகிறேன். திருச்சியில் ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு வரச் சொல்லி, என்னை கவனிங்க எனச் சொல்லியிருப்பேனே!.” என்றார்.
இது சம்பந்தமாக லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் அவர்களிடம் பேசினோம். “எந்தவித அரசியல் தலையீடுகளும் இல்லாமல் பால்துரை உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். கைதுசெய்யக்கூடிய அளவுக்கு இந்தப் புகாரில் பெரிதாக எதுவுமில்லை. புகாரின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம். நீதிமன்றத்தில் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்” என்றார்.

