Tamilnadu oi-Vignesh Selvaraj
Published: Friday, June 16, 2023, 8:35 [IST]
கோவை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் இன்று மாலை கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. திமுக எம்.பி டி.ஆர் பாலு மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பாஜக அரசின் ஜனநாயக விரோத, பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து கோவை மாநகர், சிவானந்தா காலனியில் இன்று மாலை 5 மணி அளவில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டாக அறிவித்தனர். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கும் பாஜக தலைமை. மாநிலங்களில் நடந்த பல்வேறு சட்டமன்றத் தேர்தல்களில் வரிசையாகத் தோற்று வருவதும்,நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் காட்டி வரும் எதிர்ப்பும் சேர்ந்து எந்தச் செல்வாக்கும் இல்லாத அரசாங்கமாக ஒன்பதாவது ஆண்டில் மொத்தமாகத் தேய்ந்துவிட்டது. எனவே, நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை விட்டு இறங்குவது மட்டுமல்ல, எதிர்பாராத படுதோல்வியை அடையப் போகிறோம் என்பதை பாஜக தலைமை உணர்ந்துவிட்டது. எனவே, தனக்கு எதிரான ஜனநாயக சக்திகளின் பலத்தைக் குறைப்பதன் மூலமாக வெற்றியை அடையலாமா என்ற இறுதித் தந்திரத்துக்குள் பாஜக தலைமை இறங்கி உள்ளது. இந்தியா முழுமைக்கும் பாஜகவுக்கு எதிரான அரசியல் ஜனநாயக சக்திகளின் அணிச் சேர்க்கைக்கான நாளாக ஜூன் 23-ஆம் தேதி குறிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மதவாத, எதேச்சதிகார அரசியலை வேரறுக்கும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவும், கட்சிகளின் உறுதியைக் குலைக்கவும் முயற்சிகள் எடுக்கிறது. அதனை அடையாளமாக பல்வேறு மாநிலங்களில் விசாரணை அமைப்புகளின் மூலமாக பாஜக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை 17 மணி நேரம் விசாரணை என்ற பெயரால் சித்திரவதை செய்துள்ளார்கள். நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இதயச் சிகிச்சை செய்ய வேண்டிய அளவுக்கு நெருக்கடியை உண்டாக்கி விட்டார்கள். விசாரணைக்கு அமைதியாக ஒத்துழைப்புத் தந்தவரையே இந்தளவுக்கு வேண்டுமென்றே தொல்லையையும், நெருக்கடியையும் கொடுத்திருப்பது பழிவாங்குவதே தவிர, விசாரணை அல்ல. மேலும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய பாதுகாப்புப் படைப் போலீசாரை அழைத்து வருவது தான் மாநில ஆட்சியின் மாண்பைக் காக்கும் முறையா? இதன் மூலமாக எங்கும், எப்போதும் நுழைந்து எதையும் செய்வோம் என்ற ஆணவ போக்கே தெரிகிறது. எச்சரிக்கை விடுக்கிறார்களா? மிரட்டுகிறார்களா? இவை எதற்கும் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல, எனவே, இதனை கண்டித்து இன்று மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை கோவையில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் செந்தில் பாலாஜியை அராஜக முறையில் கைது செய்த பாஜக அரசைக் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர்.பாலு பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு னாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகைதீன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர். மேலும், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன உரையாற்ற உள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Protesting the arrest of Minister Senthil Balaji and condemning the central BJP government’s actions, the DMK and its allied parties are going to hold a protest rally in Coimbatore today.
Story first published: Friday, June 16, 2023, 8:35 [IST]

