லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காற்று மாசை குறைக்க பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது தேசிய அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தொடங்கிய மாநில வளர்ச்சி குறித்த விவாதம் தற்போது வரை நீண்டு வருகிறது. அதாவது முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டுதான் இந்த அளவுக்கு பிரமாண்டமான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தாலும் மாநில வளர்ச்சிக்கான பல முக்கிய நடவடிக்கைகள் இந்த பட்ஜெட் மூலம் மேற்கொள்ளப்படும் என்று பாஜக உறுதியளித்துள்ளது. அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. முதல் விஷயம் தொழில் வளர்ச்சி. உத்தரப் பிரதேசம்தான் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். அதற்கேற்ப மக்கள் தொகையும் அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அம்மாநில மக்கள் வேலைக்காக டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். எனவே இந்நிலையை மாற்ற தொழிற் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல சுகாதார துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆம்புலன்ஸ் இல்லாமல் பைக்கில் சடலத்தை சுமந்து சென்ற அவலம் போல ஏகப்பட்ட பிரச்னைகளை உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனைகள் எதிர்கொண்டு வருகின்றன. எனவே அரசு மருத்துவமனைகளை பரவலாக்க மாவட்டம் தோறும் ஒரு அரசு மருத்துவமனைகளை மாநில அரசு புதியதாக திறக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நிதியும் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக கல்வி மற்றும் வேளாண்மை. கல்வியிலும் வேளாண்மையிலும் கூடுதல் கவனம் செலுத்த இந்த பட்ஜெட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆக இந்த மூன்று விஷயங்களிலும் திட்டமிட்டவாறு தீவிரமாக செயலாற்ற உ.பி அரசு களமிறங்கியுள்ளது. மேலும், ‘பசுமை ஹைட்ரஜன்’ உற்பத்தி மையத்தை அம்மாநில அரசு அமைக்க இங்கிலாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி ரூ.16,000 கோடி முதலீட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி யைம் உத்தரப் பிரதேசத்தில் உருவாக்கப்படும். இதன் மூலம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் படி எரிபொருளான பெட்ரோல், டீசல் போன்றவைக்கு பதில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும். இதனால் காற்று மாசு குறைந்து உலகம் வெப்பமயமாதல் தடுக்கப்படும். ஆனால் இது எல்லாம் இந்த ஒரு ஹைட்ரஜன் உற்பத்தி மையத்தால் மட்டும் சாத்தியமில்லை என்றும் எனவே இதேபோல மாநிலம் முழுவதும் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும் என்றும், இது நாட்டின் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

