சென்னை: தொழிலதிபர் மனைவியை கடத்திய வழக்கில் சதுர்வேதி சாமியார் 31ம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை தியாராயர் நகரில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தவர் சதுர்வேதி சாமியார். தன்னை கிருஷ்ணனின் அவதாரம் என்று கூறி பவுர்ணமிதோறும் அறக்கட்டளையில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார். ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைக்க சாமியாரை நாடினார். தொழிலதிபர் வீட்டுக்குள் நுழைந்த சதுர்வேதி சாமியார், கீழ் தளத்தை அபகரித்துக் கொண்டார்.
ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி மற்றும் மகளை கடத்தியதாக சாமியார் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சுரேஷிடம் ரூ. 15 லட்சம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக பெற்றதாகவும் வழக்கு தொடரப்பட்டது. அதுமட்டுமின்றி டி.டி.கே சாலையில் உள்ள சுரேஷ் வீட்டின் கீழ் தளத்தையும் ஆக்கிரமித்ததாக சாமியார் மீது புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மத்திய குற்றவியல் பிரிவு காவல்துறையினர் இவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்க தொடங்கினர். விசாரணையில் சாமியார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு சதுர்வேதி சாமியார் கைது செய்யப்பட்டார். சில தினங்களில் ஜாமினில் வெளிவந்த சாமியார் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். வழக்கில் ஏற்கனவே தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூலை 31-ல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

