கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று அங்கு அரசு அலுவலகங்கள் எவ்வாறு செயல்படுகின்ற என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். நான்கு மாவட்டங்களுக்கு சேர்த்து ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று செங்கல்பட்டில் நடைபெற்றது. அப்போது அந்த மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள நகரங்களில் மக்கள் பயனடையும் வகையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, “அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 8 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.5.50 மட்டும் வசூலிக்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்த புதிய அறிவிப்பானது மூன்று வீடுகளுக்கு குறையாமல், 10 வீடுகளுக்கு குறையாமல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு மட்டும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவை மின் தூக்கி வசதி பெற்றிருக்ககூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசின் இந்த அறிவிப்பின் மூலம் நடுத்தர மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
அடுக்குமாடி குடுயிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு, வீட்டு கணக்கில் தான் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. எனவே முதல் 100 யூனிட் இலவசம் என்ற சலுகையும் நடைமுறையில் இருந்தது. பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட், பெரிய விளக்குகள், மற்றும் பிற வசதிகள் உள்ளன. இவற்றுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கப்பட்டு வந்தது.
தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கான மின்சார கட்டணத்தை உயர்த்தியது. அப்போது அடுக்குமாடி குடியிருப்பு பொதுப் பயன்பாட்டு இணைப்பை, வீட்டு கணக்கிலிருந்து வணிக கணக்குக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இதனால் 100 யூனிட் இலவச மின்சார சலுகை ரத்தானது, அதேபோல் மின் கட்டணமும் உயர்ந்தது.
அதேபோல் இந்த ஜூலை மாதமும் அடுக்குமாடி பொதுப் பயன்பாட்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கடும் அதிருப்தியடைந்தனர். இதனால் தமிழக அரசு தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 8 ரூபாய்க்கு பதிலாக இனி ரூ.5.50 மட்டும் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அதிலும் பத்து வீடுகளுக்கு குறைவான, லிப்ட் வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும் இது பொருந்தும் என்று அறிவித்துள்ள நிலையில் சென்னை, கோவை போன்ற நகரங்களில் பெரும்பாலானோர் இந்த அறிவிப்பால் பயன்பெற முடியாமல் போகும். எனவே அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் இந்த அறிவிப்பை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டு வருகிறது.


முதல்வர் ஐயா மின் கட்டணம் குறைத்ததற்கு முதல்வர் ஐயாவுக்கு கோடான கோடி நன்றி