
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் கம்மாளப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் சந்துரு மற்றும் செல்வ பெருமாள் ஆகியோர் உணவு இடைவேளை முடிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் வீண் வம்பு செய்ததாக தெரிகிறது. இதனால் ஆறாம் வகுப்பு மாணவர்கள் சந்துரு மற்றும் செல்வ பெருமாள் ஆகியோர் ஒன்பதாம் வகுப்பு மாணவர் மனோஜ் மற்றும் அவரது நண்பர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஆறாம் வகுப்பு படிக்கும் இருவரையும் தாக்கியதோடு அவர்களை வகுப்பு அறையில் இருந்த ஆணியில் ஒருவரையும், கதவில் ஒருவரையும் சட்டையை தூக்கி மாட்டி உள்ளனர். இதில் செல்வ செல்வபெருமானின் கழுத்து இறுக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து மற்ற மாணவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு முகத்தில் தண்ணீர் தெளித்து அசுவாசப்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் விரைந்து வந்து மாணவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர்.
தற்போது அரசு மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் குறித்து பள்ளி ஆசிரியர்கள் முறையாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பள்ளி என்பது பாதுகாப்பாக இருக்க வேண்டும், பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பாக இருக்க முடியும்.
இச்சம்பவம் குறித்து இதுவரை அப்பள்ளியின் ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காதது கண்டனத்திற்குரியது எனவும், தமிழகத்தில் தற்போது பள்ளி வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆசிரியர்களின் அஜாக்கிரதையால் இச்சம்பவம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க ஆசிரியர்கள் கவனமுடன் மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

