Tamilnadu oi-Halley Karthik
Published: Wednesday, June 21, 2023, 16:35 [IST]
திருப்பத்தூர்: இறந்து போன தனது மகனை, வீட்டிற்கு அழைத்துவர செய்யப்பட்ட அமானுஷ்ய பூஜை நாட்றம்பள்ளி அருகே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள சொரக்காயல் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. திருமணத்திற்கு பின்னர் நீண்ட கால வேண்டுதலுக்கு பிறகு மகன்கள் பிறந்ததால் அவர்களை மிகுந்த பாசத்தோடு கேசவன் வளர்த்து வந்துள்ளார். அதுவும் இளைய மகன் என்றால் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிரியம். இப்படியாக குடும்பம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்க அப்போதுதான் அந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இளைய மகன் உதய் வசந்த், ஊரில் உள்ள ஏரிக்கரையில் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் கேசவனின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் பாதித்தது. இதனால் மிகுந்த மன வேதனையிலிருந்த குடும்பத்தினர், சாமியாரிடம் என்று இந்த துயரத்திலிருந்து மீள்வதற்கான வழியை கேட்டிருக்கின்றனர். இறந்தவரின் ஆன்மா அமைதியின்றி சுற்றித் திரிவதாகவும், அந்த ஆன்மாவை குடும்பத்துடன் சேர்த்துவிட்டால் அமைதி கிடைத்துவிடும் என சாமியார் தீர்வு சொல்லியிருக்கிறார். இதனையடுத்து தங்களது மகனை குடும்பத்துடன் சேர்த்து வைக்க தேவையான பூஜையை நடத்த கேசவன் முடிவெடுத்துள்ளார். அமாவாசையை அடுத்த மூன்றாவது நாளான நேற்று இதற்கான சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பூங்கரகம் எடுத்து மஞ்சள், குங்குமம் தெளித்து வழி நெடுக பூ தூவி சென்று விபத்து நடந்த இடத்தில் உதய் வசந்தை குடும்பத்தினர் அழைத்துள்ளனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த பூஜையில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றிருக்கின்றனர். மேள தாளம் முழங்க ஏரிக்கரைக்கு சென்ற குடும்பத்தினர் மந்திரம் ஓதி, சிறு வயதிலிருந்து தனது மகனுக்கு காட்டிய அன்பை நினைவுபடுத்தி அவரை அழைத்தனர். நான்கு புறமும் எலுமிச்சை பழத்தை வெட்டி வீசி சாமி ஆடி மகனை அழைத்த உறவினர்கள், பின்னர் அவரை கையோடு அழைத்து வந்ததாக கூறி மீண்டும் அங்கிருந்து மேள தாளம் முழங்க வீடு திரும்பினர். வரும் வழி முழுவதும் எலுமிச்சை பழமும், மஞ்சள் நீரும் தெளிக்கப்பட்டிருக்கிறது. இந்த சடங்கை முதல் முறையாக பார்த்தவர்கள் சற்று பயந்திருக்கின்றனர். இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில், “இது போன்ற சடங்குள் நடப்பது சர்வ சாதாரணம். உருண்ட எலுமிச்சை..அகால மரணம்.. ஆவியை வீட்டிற்கு அழைக்க அமானுஷ்ய பூஜை! திகிலடித்த திருப்பத்தூர் ஏற்கெனவே பலமுறை இது போன்ற சடங்குகள் இங்கு நடந்திருக்கின்றன. மகனின் மீதுள்ள பாசத்தால்தான் இந்த சடங்கு நடக்கிறது. எனவே இதில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஊர் வழக்கப்படி அகால மரணமடைந்தவர்களின் ஆன்மா, மரணித்த இடத்திலேயேதான் சுற்றித் திரிந்துக்கொண்டிருக்கும். அது குடும்ப உறுப்பினர்களை காணாத ஏக்கத்தில் அவ்வழியே போவோர், வருவோரை பயமுறுத்திக்கொண்டிருக்கும். எனவே இந்த ஆன்மாவை திருப்திப்படுத்த பூஜை செய்து அங்கிருந்து ஆன்மாவை சுடுகாட்டிற்கோ, வீட்டிற்கோ அழைத்து வருவார்கள். இப்படி செய்வதன் மூலம் ஆன்மா திருப்தியடைந்து மோட்சம் பெறும். இந்த சடங்குகள் பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் நடக்கிறது. அப்படியாகத்தான் இந்த சடங்கும் நடந்திருக்கிறது” என்று கூறியுள்ளனர். தங்களது மகனின் ஆவியை மீண்டும் வீட்டிற்கு வரவழைக்க நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த அமானுஷ்ய பூஜை அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
A supernatural pooja performed to bring his dead son home has caused panic near Natrampalli.
Story first published: Wednesday, June 21, 2023, 16:35 [IST]

