ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று (டிசம்பர் 13) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி, தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஆளுநர் ஆளுநர் ஆர். என் ரவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த அக்டோபர் 30ம் தேதி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
மக்கள் உரிமைகளை பறிக்க முயற்சி!
வழக்கு விசாரணையில் “தமிழ்நாடு ஆளுநர் ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வதால் பெரும் அரசியலமைப்பு சிக்கல் ஏற்பட்டுவிட்டது. ஆளுநரின் இந்த செயல் அதிகார துஷ்பிரயோகம் மட்டுமின்றி, அரசியல் சாசனத்துக்கும் எதிரானது.
ஆளுநர் ரவி மக்கள் தீர்ப்பை விளையாட்டு பொருளாக நினைத்து செயல்படுகிறார். அவர் தனது தனிப்பட்ட செயல்பாடுகள் மூலம் மக்களின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கிறார். மக்கள் தேர்வு செய்த அரசை செயல்பட விடாமல் தடுக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரங்களில் விசாரணையை தொடர்வதில் குறுக்கே நிற்கிறார்” என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை வழக்கில் தமிழ்நாடு அரசு முன்வைத்தது.
மேலும், “சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும், தமிழக அரசாணைகளுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த ஒப்புதலுக்கு கால வரம்பும் நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்” என்றும் வலியுறுத்தியது. இதனைக்கேட்ட உச்சநீதிமன்றம் ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
திருப்பி அனுப்பிய ஆளுநர்!
இதனையடுத்து நவம்பர் 13ஆம் தேதி அவசரம் அவசரமாக, தம்மிடம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர்.
அப்படி திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தை கடந்த மாதம் 18-ந்தேதி கூட்டி மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பி வைத்தது தமிழக அரசு.
குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்!
ஆனால் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கு அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தவறு என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டது.
அதன்படி, ”சட்டப்படி ஆளுநருக்கு மசோதாக்களை மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரமே கிடையாது. ஏனென்றால் அவர் திருப்பி அனுப்பிய போதே அதில் முடிவு எடுத்துவிட்டார். எனவே மீண்டும் அதே மசோதா வரும் போதும் அதில் அவரே தீர்வு காண வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
தமிழ்நாடு அரசு கூடுதல் மனு!
இதன் தொடர்ச்சியாக, ”மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு பரிந்துரைத்த ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது. 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசு கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு அரசின் மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு சாதகமான உத்தரவை பிறப்பிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

