
கோவை பீளமேடு பகுதியில் பாஜக மகளிர் அணி சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’சகோதர சகோதரிகளுக்கும் எங்களுடைய திருவோணம் நல்வாழ்த்துக்கள் தமிழக முதல்வர் கூட ஓணம் திருநாளில் மலையாளத்தில் வாழ்த்து சொல்லி இருக்கிறார். வரவேற்கின்றோம். ஆனால் தீபாவளிக்கு முதல்வர் வாழ்த்து கூறினால் அனைவருக்குமான முதல்வராகவும் செயல்படுகிறார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும்.
ஓணம் மாவலி சக்கரவர்த்தி உடைய கதை. தீபாவளிக்கும் ஒரு புராணக்கதை இருக்கிறது. ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு. அனைவருக்கும் இந்த தீபாவளிக்காக வாழ்த்து தெரிவிப்பாரா என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
திமுக கோவை மேயர் பற்றிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த வானதி, மேயர் என்பது அதிகாரம் வாய்ந்த பொறுப்பு. மேயர் என்பவர் அரசியல் அதிகார முதன்மையான நபராக மாநகராட்சியில் இருப்பவர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது இதுபோன்ற புகார் தெரிவிப்பதை மாநில அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பிரதிநிதிகளாக நிர்வாகிகள் ஆட்சிக்கு வரும்போது எல்லாம் பொதுமக்களை மிரட்டுவதும், சட்டத்தை தங்களுக்கு சாதகமாக சர்வ சாதாரணமாக நடக்கின்ற விஷயம். கோவை மேயர் விஷயத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழலுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது. யார் யாருக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கிறதோ அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இருக்கின்றதோ அதை வைத்து தான் மத்திய அரசு ஏஜென்சிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த கட்சி… இந்த கட்சி எந்த பாகுபாடும் பிஜேபிக்கு இல்லை. அவர்கள் ஆதாரத்தின் அடிப்படையில் இதனை எடுத்து வருகிறார்கள்’’ என்றார்.


